

புத்ராஜெயா, ஜூலை 25-
எந்தவொரு குற்றமும் செய்யாதவர்களைசொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து தண்டனை அனுபவிப்பதாகவும் அவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க முறையிட்டனர்.
அவர்களை அரசு விடுவிக்க வேண்டுமென கோரி உள்துறை அமைச்சில் தேசிய நட்புறவு பொதுநல அமைப்பு மகஜர் இன்று வழங்கப்பட்டது.
சொஸ்மா சட்டத்தை நிறுத்த வேண்டுமென நாங்கள் கூறவில்லை.
மாறாக எந்தவொரு குற்றமும் செய்யாதவர்களை இன்னமும் சொஸ்மா சட்டத்தின் கீழ் சிறையில் வைத்திருப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
உண்மையிலேயே அவர்கள் குற்றம் செய்திருந்தால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துங்கள்.
மாறாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளது நியாயமற்ற செயல் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
இதனால் அவர்களுக்கு மட்டுமின்றி அவர்களின் குடும்பங்கள் பல இன்னல்களை சந்தித்து வருகிறது.
குற்றம் செய்தவர்களுக்கு நியாயம் கேட்டு நாங்கள் இங்கு வரவில்லை மாறாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இன்று வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நியாயம் வேண்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம் என அமைப்பின் தலைவர் ஜோசப் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபூடின் நஸுத்தியோன் மற்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆகியோர் சீர்தூக்கி பார்த்து ஒரு முடிவை எடுக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை சம்பந்தப்பட்ட அமைச்சின் தரப்புடன் தொடர்பு கொண்டு தீர்வுக் கிடைக்கும் வரை போராடுவோம்.
இந்த விவகாரம் தொடர்பில் இன்று உள்துறை அமைச்சிடம் மகஜர் வழங்க அமைப்பை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் அமைச்சகத்தின் நுழைவாசல் அருகில் கூடி மகஜரை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

