
எதிர்வரும் ஆகஸ்ட் 2ஆம் திகதி அஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக ஒளிபரப்புக் காணும் “அச்சமில்லை அச்சமில்லை” எனும் வாத நிகழ்ச்சி தொகுப்பாளனியாக நடிகை கௌதமியை நியமித்தது பொருத்தமற்றது என உலகத் தமிழர் பாதுகாப்புச் செயலகத்தின் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.
மலேசிய தமிழர்கள் எதிர்நோக்கும் கல்வி, பொருளாதாரம், பண்பாட்டு, வாழ்க்கை தரம் போன்ற எண்ணற்ற சமூக சிக்கலை ஆராயும் இந்நிகழ்ச்சியில் நம் நாட்டுக்கு தொடர்பு இல்லாத குறிப்பாக இந்நாட்டு மக்கள் எதிர்நோக்கும் சிக்கலை சற்றும் அறியாத நடிகை கௌதமியை நமது நிகழ்ச்சிக்கு தொகுப்பாளனியாக நியமித்திருப்பதை தவிர்க்க வேண்டும் என்றார்.
நம் நாட்டிலே எண்ணற்ற பேச்சாற்றல் கொண்டவர்கள் கல்விமான்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என திறமை பெற்ற தொகுப்பாளர்கள் இருக்க, ஏன் நம் சிக்கலைப் பேச அயலகர் தேவை.? என்றார்.
ஆகையால் ஆஸ்ட்ரோ நிறுவனம் வாய்ப்புக்காக காத்திருக்கும் மண்ணின் மைந்தர்களான உள்ளூர் தொகுப்பாளர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென உலகத் தமிழர் பாதுகாப்புச் செயலகம் சார்பில் வேண்டுகோள் விடுத்தார்.

