பேராக் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு 30 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி.

பீடோர்,ஆக.1: பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆக்கப்பூர்வமானச் செயல்பாடுகளைப் பாராட்டியதோடு அச்சங்கத்தின் தொடர் நடவடிக்கைகளையும் கேட்டறிந்ததோடு அச்சங்கத்திற்கு வெ.30 ஆயிரத்தை மானியமாக வழங்குவதாக மாநில சுகாதாரம்,மனிதவளம்,ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்துறை பிரிவுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் அறிவித்தார்.

மேலும், அச்சங்கத்தின் புதிய தலைமைத்துவத்திற்கும் அதன் செயலவைக்கும் வாழ்த்து தெரிவித்த அவர் தொடர்ந்து சங்கத்தை தமிழ் சார்ந்தும் நமது இலக்கியம் சார்ந்தும் எதிர்கால இலக்கை நோக்கி காலத்திற்கு உகர்ந்த நிலையில் பயணிக்க வைக்க ஆலோசனையும் வழங்கி அவர் தொடர்ந்து சங்கம் நனிச் சிறப்போடு செயல்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

சங்கத்தின் அடுத்த ஆறு மாதங்களுக்கான செயல்திட்டங்களையும் பார்வையிட்ட அவர் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் கட்டிடத்தின் சீரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்தும் கேட்டறிந்ததோடு அதற்கான நடவடிக்கைகளுக்கும் அவர் நல்ல ஆலோசனை வழங்கினார்.

அதேவேளையில், இச்சங்கத்தின் மேனாள் தலைவர்கள்,பொறுப்பாளர்களின் செயல்பாட்டையும் நடவடிக்கைகளையும் நடப்பு நிர்வாகம் போற்றிட வேண்டும்.அவர்களிடமும் ஆலோசனைகள் பெற்று சங்கத்தை நன்நிலைக்கு உயர்த்திடல் வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கிய அவர் வருங்காலத்தில் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தனித்துவமான ஒரு சங்கமாய் உயர்ந்து நிற்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

மரியாதை நிமத்தமான இச்சந்திப்பில் சங்கத்தின் தலைவர் சிவாலெனினுடன் துணைத்தலைவர் ச.முனியாண்டி,பொருளாளர் ஆறுமுகம்,செயலவை உறுப்பினர்களான .சித.பழனியம்மாள்,சுப.கதிரவன்,குழந்தைமேரி மற்றும் ச.லிங்கேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்ட வேளையில் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு தனது ஆதரவும் பங்களிப்பும் எல்லா காலக்கட்டத்திலும் நிறைவாகவே இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக சங்கத்தின் செயல்பாடுகள்,அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் சிவநேசனுக்கு சங்கத்தின் தலைவர் சிவாலெனின் விளக்கம் அளித்ததோடு சங்கப் பொறுப்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்தார்.மேலும்,சங்கத்தின் நடப்பு செயல்பாடு,வருங்கால செயல் திட்டம் அனைத்தையும் சிவநேசனின் பார்வைக்கு சிவாலெனின் முன் வைத்தார்.

அதுமட்டுமின்றி,கடந்தக்காலங்களில் சிவநேசன் வழங்கிய ஆதரவு மற்றும் மானியங்களுக்கும் நன்றி பகிரப்பட்டதோடு கேட்காமலேயே 30ஆயிரம் ரிங்கிட் மானியமாக அறிவித்தமைக்கும் சங்கத்தின் சார்பில் நன்றி கூறி மாலை அணிவித்து மாண்புமிகு சிவநேசனுக்கு மரியாதையும் செய்யப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles