
ஷா ஆலம், ஆக. 5- நாடு முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்களில் குறிப்பாக அம்மன் ஆலயங்களில் ஆடி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. மாங்கல்யம் நிலைப்பதற்கும் திருமண வரம் கிட்டுவதற்கும் பாவங்கள் நீங்குவதற்கும் இறைவனை மனமுருகி பிரார்த்திக்கும் உன்னத திருநாளான இந்த ஆடி திருவிழா ஒவ்வோராண்டும் ஆடி மாதம் 18ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
நாட்டின் பல ஆலயங்களில் இரத ஊர்வலத்துடன் வெகு சிறப்பாக நடைபெறும் இந்த உற்சவத்தில் மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு, வர்த்தகம், முதலீடு மற்றும் போக்குவரத்து துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீ மூடா ஸ்ரீ சுவர்ண மகா மாரியம்மன் ஆலயம்

இங்குள்ள செக்சன் 25, தாமான் ஸ்ரீமூடா ஸ்ரீ சுவர்ண ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆடி திருவிழாவில் பாப்பா ராய்டு, கணபதி ராவ், இந்திய உலோக பொருள் மறுமலர்ச்சி சங்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ தீபா ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்துக்களின் வலுவான சமய அடித்தளத்திற்கான ஆதாரமாக இத்தகைய விழாக்கள் விளங்குவதோடு இனங்களுக்கிடையே ஒற்றுமையை வளர்ப்பதிலும் பெரும் பங்காற்றுகின்றன என்று பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டு குறிப்பிட்டார்.
பூச்சோங், 14 வது மைல் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம்
பூச்சோங், 14 மைலில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆடி திருவிழாவிலும் பாப்பா ராய்டு கலந்து சிறப்பித்தார். வட்டார மக்களின் சமய மற்றும் கலாசாரத்தின் அடையாளமாக விளங்கும் இவ்விழாவை கண்ணியத்துடனுடம் முகிபா உணர்வுடனும் கொண்டாட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
சுங்கை பூலோ, வண்ண துர்க்கை அம்மன் ஆலயம்
சுங்கை பூலோவில் வீற்றிருக்கும் வண்ண துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகத்தின் சிறப்பு அழைப்பின் பேரில் ஆலயத்தின் ஆடி திருவிழாவில் பாப்பராய்டு கலந்து கொண்டார்.
இந்த ஆலயம் வழிபாட்டு நிகழ்வுகளோடு பாரம்பரிய நடன வகுப்பு, யோகாசன வகுப்பு மற்றும் வசதி குறைந்தவர்களுக்கு உணவுக் கூடைகள் வழங்குவது போன்ற சமூக நிகழ்ச்சிகளுக்கும் முக்கியத்தும் வழங்கப்படுவதை அறிந்து தாம் பெரிதும் மகிழ்ச்சி கொள்வதாக பாப்பராய்டு குறிப்பிட்டார்.

