
ஈப்போ, ஆக. 7: பேராக் முத்தமிழ் பாவலர் மன்றமும், பேராக் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகமும் ஒன்றிணைந்து செயற்கை நுண்ணறிவு மாநாட்டை வரும் 9.8.2025( சனிக்கிழமை) காலை மணி 9.00 க்கு, கோப்பொங் ஆர்.தி.சி. மண்டபத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தலைவர் அருள் ஆறுமுகம் கூறினார்.
இந்நிகழ்வில் கட்டுரை எழுதும் போட்டியில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர். அப்போட்டியில் வெற்றிப் பெறும் மாணவர்களுக்கு மறைந்த டான்ஸ்ரீ கோ.இராஜவின் தமிழ் இலக்கிய விருது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த தமிழ் இலக்கிய பரிசுகளை ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு வழங்க தயாராக உள்ளதாக அமரர் டான்ஸ்ரீ கோ.இராஜவின் புதல்வர் சுந்தரம் இந்நிகழ்வை தொடக்கி வைத்தபோது கூறினார்.
இம்மாதிரியான நிகழ்வுகள் வெற்றியடைய பேராக் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகம் மற்றும் 134 தமிழ்ப்பள்ளிகளும் ஒன்றிணைந்து ஆதரவு வழங்குவோம் என்று உறுதியளித்தார் பேராக் தமிழ்ப்பள்ளி தலைமையாசரியர் கழகத்தலைவர் ஜெயகுமார்.

