
கோத்தா கெமுனிங் ஆகஸ்ட் 11 – தேசபக்தி உணர்வும், நாட்டை நேசிக்கும் உற்சாகமும் காற்றை நிரப்பிய நிலையில், கோத்தா கெமுனிங் சட்டமன்ற தொகுதியில் 2025ஆம் ஆண்டிற்கான சுதந்திர தின ஊர்வலம் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெற்றிகரமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி, கோத்தா கெமுனிங் மாநில சட்டமன்ற உறுப்பினர் பிரகாஸ் சம்புநாதன் அவர்களின் அலுவலகம் சார்பில், எங்கள் தேசத்தின் 68ஆம் ஆண்டு சுகந்திர தினத்தைக் கொண்டாடும் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த ஊர்வலம் ஸ்ரீ மூடாவில் தொடங்கி, MBSJ மண்டலம் 7 வழியாக, கோத்தா கெமுனிங் தொகுதியின் பல பகுதிகளைக் கடந்து சென்றது. பயணத்தின் போது, ஜாலூர் கெமிலாங் (மலேசியக் கொடி) பறக்கவிடப்பட்டு, ஒற்றுமை உணர்வு பரப்பப்பட்டது. மோட்டார் சைக்கிள்கள், கார்கள் மற்றும் நான்கு சக்கர வண்டிகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் கொடிகள் மற்றும் சுதந்திர தின அலங்காரங்களுடன் அழகாக அலங்கரிக்கப்பட்டு பங்கேற்றன.
ஊர்வலத்தின் முழு பாதையிலும், பங்கேற்பாளர்கள் பொதுமக்களுக்கு ஜாலூர் கெமிலாங் கொடிகளை வழங்கி, சுதந்திர மாதத்தை முன்னிட்டு “கொடியைப் பறக்கவிடுங்கள்” என்ற பிரச்சாரத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

“இந்த ஊர்வலம் என்பது வாகன அணிவகுப்பு மட்டுமல்ல, இது பல இன, பல பண்பாட்டு மலேசியர்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் ஒரு சின்னமாகும். கோத்தா கெமுனிங் மக்களை, நாட்டின் விடுதலை தினத்தை ஒருமித்த உணர்வுடன் கொண்டாடுவதைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன்,” என்று பிரகாஸ் சம்புநாதன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தேசபக்தி பாடல்கள் பாடப்பட்டு, நினைவுப்படங்கள் எடுக்கப்பட்டன. மகிழ்ச்சியான சூழலில் உள்ளூர் மக்கள் ஊர்வலக் குழுவினரை வரவேற்றனர். பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களின் பங்களிப்பு, மலேசியா மதானி உணர்வு மக்கள் மனதில் உறுதியாக இருப்பதை நிரூபித்தது.
பிரேகாஸ் அவர்கள், எதிர்காலத்தில் சுதந்திர தின ஊர்வலத்தை கோத்தா கெமுனிங் தொகுதியில் ஆண்டுதோறும் நடத்தும் எண்ணம் இருப்பதாகவும், இளம் தலைமுறையினர் வரலாற்றையும் விடுதலையின் உண்மையான அர்த்தத்தையும் தொடர்ந்தும் மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

