
கடந்த 2025 ஆம் ஆண்டு நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது, சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. யுவனேஸ்வரன் ராம்ராஜ் தனது தொகுதியில் உள்ள 6 தமிழ்ப்பள்ளிகளை ஒன்றிணைக்க வேண்டுமென பரிந்துரை செய்தது, உள்ளூர் தமிழ் சமூகத்தில் பெரும் அதிருப்தி மற்றும் கவலைகளை எழுப்பியுள்ளது.
இவ்விஷயத்தில் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார் பெரிகாத்தான் நேஷனல் கட்சியின் ஜொகூர் மாநிலத்தில் செயல்பட்டு வரும், பெர்சேக்குத்து பெர்சாத்து மலேசியா (BERSATU) தேசிய பொருளாளர் மற்றும் ஜொகூர் மாநில உதவி தலைவர் பூபாலன் பொன்னுசாமி.
“தமிழ்ப்பள்ளிகள் நமது அடையாளம், மொழி மற்றும் பண்பாட்டு அடித்தளம் ஆகும். மாணவர் எண்ணிக்கையை காரணம் காட்டி பள்ளிகளை ஒன்றிணைப்பது எளிய தீர்வல்ல. அதற்கு பதிலாக, அரசாங்கம் ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான வளங்கள், ஆசிரியர்கள் மற்றும் அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும். நான் ஜொகூரில் மட்டும் அல்ல, நாடு முழுவதும் தமிழ்ப்பள்ளிகள் நிலைத்திருக்கவும், வளம்பெறவும் எப்போதும் குரல் கொடுப்பேன்.”
▪️ சுங்கை மூவார் தோட்ட தமிழ்ப்பள்ளிக்காக நிலம் அடையாளம் காணப்பட்டு 10 ஆண்டுகள் கடந்தும் எந்தக் கட்டுமானமும் தொடங்கப்படவில்லை.
▪️ 2017 இல் பாரிசான் நேஷனல் ஆட்சிக்காலத்தில், 5 கிலோமீட்டர் வட்டாரத்தில் உள்ள குறைந்த மாணவர் எண்ணிக்கையுள்ள தமிழ்ப்பள்ளிகளை ஒன்றிணைக்க கல்வி அமைச்சு திட்டம் வகுத்தது.
▪️ பெற்றோர்கள் மற்றும் சமூகத்தின் கடும் எதிர்ப்பால் அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
▪️ இந்நிலையில், நாடாளுமன்றத்தில் மீண்டும் ஒருமுறை இதே பரிந்துரையை முன்வைத்திருப்பது தமிழ் சமூகத்தில் அதிருப்தி மற்றும் எதிர்ப்பை எழுப்பியுள்ளது என்று பூபாலன் பொன்னுசாமி தெரிவித்தார்.

