டத்தோஸ்ரீ சரவணன் தலைமையில் செப்டம்பர் 21ஆம் தேதி இசைமுரசு நாகூர் ஹனீஃபா அவர்களின் நூற்றாண்டு விழா!

இசைமுரசு நாகூர் ஹனீஃபா அவர்களின் நூற்றாண்டு விழா செப்டம்பர் 21ஆம் தேதி  டத்தோஸ்ரீ சரவணன் தலைமையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது என்று டான்ஸ்ரீ ஹனிஃபா செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்தார். 

இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் இசை ஆளுமையாகத் திகழ்ந்த இசைமுரசு நாகூர் ஹனீஃபா அவர்களின் நூற்றாண்டு விழாவை மாசா பல்கலைக் கழகத்தில் ஏற்பாடு செய்துள்ளோம். நிகழ்ச்சிக்கு ம இ கா துணைத்தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான எம். சரவணன் தலைமை தங்குகிறார். 

முழுநாள் நிகழ்ச்சியாக ஒருங்கிணைப்பப்பட்டுள்ள இந்த நிகழ்வில் சர்வதேச பேச்சாளர்களும் உள்நாட்டு பேச்சாளர்களும் கலந்துகொண்டு உரை நிகழ்த்த இருக்கின்றார்கள். 

இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பிரபல பாடகர்கள், இசைக்குழுவுடன் பங்கேற்று இன்னிசை நிகழ்ச்சியை நடத்த இருக்கின்றார்கள்.  அவர்களுடன் உள் நாட்டு பாடகர்களும் பாட இருக்கின்றார்கள் 

காலை 9.00 மணிக்கு துவங்கும் நிகழ்ச்சி மாலை 5 மணி வரை நடைபெறும் என்று டான்ஸ்ரீ ஹனிஃபா கூறினார். பண்டார் சௌஜானா புத்ராவில் அமைந்துள்ள மண்டபத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்று அவர் மேலும் கூறினார்.

எல் ஆர் டி இலகு ரயிலில் வருகை தருபவர்களின் வசதிக்காக இலவச பேருந்து சேவைகள் செய்யப்படும். அனுமதி இலவசம். ஆனால் பதிவு அவசியம். உணவுக்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. விரைவில் பதிவிற்கான கூகுள் விண்ணப்பம் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.

செய்தியாளர் கூட்டத்தில் இஸ்லாமியக் கல்வி வாரியத் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால், பெர்மிம் முன்னாள் தலைவர் டத்தோ ஜமருல் கான். லீகா முஸ்லிம் தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜா நஜ்முத்தீன், மலேசிய நண்பன் நிர்வாக இயக்குனர் டத்தோ ஷாஃபி ஜமான், சொல்லமுது கம்பம் பீர் முஹம்மது பாகவி, உபைதி அறக்கட்டளை தலைவர் ஹிஷாமுதீன், கெபிமா நிறுவனர் முஹம்மது, முஸ்லிம் முன்னேற்ற சங்கத் தலைவர் ஹாஜி யூஸுப், மலேசிய இந்திய வர்த்தக சபை சார்பாக டாக்டர் நிஸாம் அல்லாபக்ஷ், மாஜூ கூட்டுறவு சங்கத்தின் இயக்குனர் டத்தோ இப்ராஹிம் ஷா, பிஜே இந்திய முஸ்லிம் சுரவ் முஹம்மதியா தலைவர் ஹாஜி இப்ராஹிம் ஆகியோர் கலந்துகொண்டனர்.  

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles