
ஷா ஆலம், செப் 3-
சிலாங்கூர் மாநிலத்தில் பெஸ்தாரி ஜெயாவில் உள்ள இந்து ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவில் துப்பாக்கி சூட்டு சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது என்று சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.
சாமி ஆடிக் கொண்டிருப்பவர் வானத்தை நோக்கி துப்பாக்கி வேட்டு கிளப்பும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
மலேசியத் திருநாட்டில் ஆலயத் திருவிழாவில் இது போன்ற சம்பவம் நிகழ்வது வேதனையை அளிக்கிறது.
இது சமய ஒற்றுமையை பிரதிபலிக்கவில்லை. மாறாக நமக்குதான் அவமானத்தை தேடித் தரும்.
கடந்த ஆண்டு பீர் ஊற்றி பொங்கல் வைத்தார்கள். பிறகு கேஷ் இயந்திரத்தில் பொங்கல் வைத்தார்கள்.
இப்போது கோவில் திருவிழாவில் துப்பாக்கி வேட்டு சம்பவம்.
நமது மக்களே நமது சமயத்தை கேவலப்படுத்தி வருகிறார்கள்.
நாட்டில்
மதக் கொண்டாட்டங்களில் எந்த வகையான வன்முறையும் இருக்கக்கூடாது என்பதை பிபிபி கட்சி கடுமையாக வலியுறுத்தி வருகிறது.
ஆகவே இதுபோன்ற செயல்கள் நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை அனைத்து தரப்பினரும் உறுதி செய்ய வேண்டும்.
மேலும் சம்பந்தப்பட்ட ஆடவர் மீது காவல் துறையினர் விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு மலேசிய இந்து சங்கமும் களம் இறங்கி சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகத்தின் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
அனைத்து கோவில் நிர்வாகிகளும் தங்களது பொறுப்பை உணர்ந்து நாட்டின் சட்ட விதிகளுக்கு ஏற்ப திருவிழா அல்லது சமய விழாக்களை நடத்த வேண்டும்.
சட்டத்தை மீறுவோர் மீது காவல் துறையினர் நடவடிக்கைகள் எடுக்க அனைத்து தரப்பினரும் ஆதரவு தருவது மிக முக்கியம் என்று டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.