
சென்னை: பாஜ தலைவர்களை டெல்லியில் சந்திக்கவும், 41 பேர் பலியான சம்பவத்தில் காப்பாற்றும்படியும் கேட்பதற்காக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா டெல்லி சென்று முகாமிட்டுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கட்டுக்கடங்காத கூட்டம் அதிகமாக இருந்தாலும், அந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று நடிகர் விஜய் விடாப்பிடியாக சென்றதாலும் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் குறித்து கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அஜாக்கிரதையாக செயல்பட்டதற்காகவும், விதிகளை மீறியதற்காகவும், 41 பேர் பலியாக காரணமாக இருந்ததற்காகவும், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், நகரச் செயலாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சி.டி.நிர்மல்குமார் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். அதேநேரத்தில் சென்னை சைபர் க்ரைம் போலீசார், கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தவெக நிர்வாகியும், நடிகர் விஜய்க்கு நெருக்கமானவருமான ஆதவ் அர்ஜுனா நேற்று மாலை 6 மணிக்கு திடீரென டெல்லிக்கு தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் தான் பொறுப்பாளராக உள்ள கூடைப்பந்து விளையாட்டு தொடர்பாக ஆலோசனை நடத்த செல்வதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார். ஆனால், டெல்லியில் எந்த ஒரு ஆலோசனை கூட்டமும் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.
டெல்லியில் பாஜ மூத்த தலைவர்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்களை அவர் ரகசியமாக சந்தித்து, 41 பேர் பலியான சம்பவத்தில் மொத்த ஆதாரமும் தங்களுக்கு எதிராக உள்ளதால், தங்களை காப்பாற்றும்படி கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன