

பெட்டாலிங் ஜெயா, அக் 3-
நாட்டில் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு உதவும் வகையில் மாபெரும் நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சியை மலேசியத் தமிழ் அறவாரியம் ஏற்பாடு செய்துள்ளது.
வரும் அக்டோபர் 11 ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு மேல் ஷா ஆலம் சுங்கை ரெங்காம் மாநாட்டு தமிழ்ப் பள்ளி மண்டபத்தில் இந்த விருந்து நிகழ்ச்சி நடைபெறும் என்று மலேசியத் தமிழ் அறவாரியத்தின் தலைவர் மாண்புமிகு மனோகரன் மாரிமுத்து தெரிவித்தார்.
துணை கல்வி அமைச்சர் வோங் கா வோ தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் 500 பேர் கலந்து கொள்வார்கள்.
கடந்த 2003 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழ் அறவாரியம் தொடங்கப்பட்டது.
அன்று முதல் இன்றுவரை நாட்டில் உள்ள தமிழ்ப் பள்ளிகளுடன் இணைந்து மலேசியத் தமிழ் அறவாரியம் இணைந்து பணியாற்றி வருகிறது.
ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி நிர்வாகம், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் எங்கள் வழிகாட்டல் திட்டங்களின் வழி நன்மை அடைந்துள்ளனர் என்று மனோகரன் மாரிமுத்து சொன்னார்.
மலேசியத் தமிழ் அறவாரியத்தை தோற்றுவித்தவர் களில் ஒருவரான மனோகரன் மாரிமுத்து இப்போது மீண்டும் ஏழாவது தலைவராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் அக்டோபர் 11 ஆம் தேதி நடைபெறும் விருந்து நிகழ்ச்சி மூலம் ஐந்து லட்சம் வெள்ளியை திரட்ட ஏற்பாடு செய்துள்ளோம் என்று நிதி திரட்டும் திட்டத் தலைவர் பொறியியலாளர் மதன்ராஜ் கங்காதரன் தெரிவித்தார்.
தீபாவளி காலக்கட்டமாக இருந்தாலும் நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் கொடுத்து வரும் ஆதரவு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார் அவர்.