
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் அக் 8-
வரும் அக்டோபர் 10 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
2026-ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.
பிரதமரால் அறிவிக்கப்பட இருக்கின்ற பட்ஜெட்டில் லெவி உயர்த்தப்பட்டால் உணவக வர்த்தகம் பெரும் பாதிப்பை எதிர்நோக்கும் என்று பிரெஸ்மா எனப்படும் மலேசிய முஸ்லீம் உணவக உரிமையாளர் சங்கத்தின் நடப்புத் தலைவர் டத்தோ ஜவஹர் அலி கவலை தெரிவித்தார்.
மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கத்தின் 21 ஆம் ஆண்டு கூட்டம் இன்று கோலாலம்பூர் MATRATE மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது .
செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக ஏற்கெனவே பிரெஸ்மா அங்கத்தினர்களான உணவக உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் லெவி உயர்த்தப்பட்டால், அது உணவகத் தொழிலில் மேலும் தேக்க நிலையையும் தடங்களையும் ஏற்படுத்தக்கூடும்.
முஸ்லிம் உணவக உரிமையாளர்கள், எரிவாயு சிலிண்டர்களை தள்ளுபடி விலையில் பெறுவதற்கான வழிவகை குறித்து மடானி அரசாங்கம் முன்னெடுப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அரசாங்கத்திற்கு கோரிக்கையை முன் வைத்தார்.
அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறை சிக்கலால் முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் பின்னடைவை சந்தித்து வருகின்ற நிலையில் ‘GANTIAN எனப்படும் மாற்றுத் தொழிலாளர்களை நியமித்துக் கொள்வதற்காக நடைமுறை முறைபடுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
சிவக்குமார், டத்தோஸ்ரீ சரவணன் ஆகியோர் மனிதவள அமைச்சராக இருந்த பொழுது ஓரளவுக்கு தங்களுடைய தொழிலாளர் பற்றாக்குறை சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டதாகவும் அதன் பிறகு நிலைமையை அப்படியே நிலைகுத்தியே இருக்கிறது என்றார் அவர்.
தற்போதைய மனிதவள அமைச்சர் ஸ்டீபன் உட்பட தொடர்புடைய உள்துறை அமைச்சகம் உள்நாட்டு வாணிகம் வாழ்க்கை செலவினை அமைச்சகம் அதிகாரிகளிடமும் பல முறை புகார் செய்தும் முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கத்தின் தொழிலாளர் பிரச்சனைக்கு இதுவரை சரியான தீர்வு காணப்படவில்லை.
ஆகவே எங்கள் பிரச்சனைகளுக்கு அரசாங்கம் தீர்வு காண வேண்டும்.
வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான தற்போதைய லெவிக் கட்டணம் அதிகமாக இருக்கின்ற வேளையில் அவர்களுக்கான ஊழியர் சேமநிதி மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு நிதியமான சொக்சோ போன்றவற்றிற்கும் நாங்கள் பணம் செலுத்தி வருகின்றோம் என்று தெரிவித்த டத்தோ ஜவஹர் அலி . அரசாங்கம் எங்களுக்கு உதவ முன் வர வேண்டும் என்றார்.