


கோப்பெங், அக்.28: இங்குள்ள கோத்தா பாரு தோட்டத்தில் சுமார் 120 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் செயல்பட்டு வருகிறது. இவ்வாண்டு மார்ச் மாதத்தில் சுமார் ஒன்றரை ஏக்கர் நிலம் ஆலயம் நிர்மாணிக்க அங்கே அனுமதி வழங்கியது கோப்பெங் பெர்ஹாட் நிறுவனம். அதன் அடிப்படையில் அந்த நிலத்தை 2 இலட்சம் ரிங்கிட் செலவில் வாங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதோடு, வரும் 2027 ல் ஆலய கும்பாபிஷேகம் நடைபெறும் என்று கம்போங் தெர்சூசுன் கிராமத்து தலைவரும், ஆலய நிர்வாக செயலவையினருமான சுப்பிரமணியம் சிவராமன் கூறினார்.
இந்த ஆலய நில பிரச்சினை கடந்த 2010 முதல் தொடர்ந்து தற்போது தீர்க்கமான முடிவை கொண்டு தீர் வு காணுகிறது. இந்த ஆலய நிர்வாகத்தின் கோரிக்கை மனுவான ஒன்றரை ஏக்கர் நிலம் கிடைக்க அனுமதி கோரியது. அந்த கோரிக்கை பல பிரச்சினைகளை சந்தித்து இறுதியில், ஆலயம் இங்கேயே நிர்மாணிக்க அனுமதியை கிடைக்கப்பெற்றது மகிழ்ச்சியான விசயமாகும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த ஆலய நிலம் கிடைக்க உதவிய முன்னாள் மற்றும் இன்னாள் அரசாங்க அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கு ஆலய சார்பாக அவர் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

அடுத்தாண்டு இந்த ஆலய திருவிழா முடிந்தவுடன் ஆலய திருப்பணி வேலைகள் தொடங்கிவிடும். அதன் பின், 2027 ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்படும். இந்த ஆலய திருப்பணிக்கு உதவிட அரசாங்கம் மற்றும் தனியார் உதவிகள் நாடப்படும். குறிப்பாக, ஆலய நிர்வாகத்தினர் விரைவில் பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசனை சந்தித்து ஆலய நிலைப்பாட்டை தெரிவிக்கவுள்ளதாக அவர் கூறினார்.
கடந்த 1997 ம் ஆண்டில் முன்னாள் பிரதமர் துன் காபார் பாபா தலைமையில் இங்குள்ள கம்போங் தெர்சூசுன் கிராமத்து மக்களுக்கு நிலப்பட்டா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள கோத்தா பாரு தோட்ட பாட்டாளி மக்கள் இந்த கிராமத்தில் குடிபுகுந்தனர். தற்போது எங்களுடைய வாழ்வாதார சூழல் தோட்டப்புறத்தில் வாழ்வது போல் அமைந்துள்ள்ளதை கண்டு மகிழ்ச்சியடைவதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த 1997 முதல் தீபாவளி பெருநாளை முன்னிட்டு இங்குள்ள 200 குடும்பத்தினருக்கு உணவுப்பொருட்கள், தீபாவளி பலகாரங்கள், பணமுடிப்பு, சான் றிதழ் போன்ற உதவிகள் செய்து வருவதாக அவர் கூறினார். அண்மையல் காலமான இருவரின் குடும்பத்தாருக்கும் உதவிகள் செய்யப்பட்டதாக அவர் கருத்துரைத்தார்.
நிறைவு விழாவில் சகோதரர் லோகேந்திரனின் புதல்விகளான ரோஷினி, பிரித்திகா தேகுவாண்டோ தற்காப்பு கலையில் பேராக் மற்றும் மலேசியாவை பிரதிநிதித்து போட்டியிட்டதை தொடர்ந்து சிறப்பிக்கப்பட்டனர். அனிசல் வெட்டி பின் விருந்து நிகழ்வும் நிறைவாக நடந்தேறியது.

