
கோலாலம்பூர், நவ 7-
தலைநகர் மிட்வேலி பேரங்காடியின் கண்காட்சி மையத்தில் இம்மாத தொடக்கத்தில் 23வது தனியார் அனைத்துலக கல்வி கண்காட்சி நடைபெற்றது.
உலக நாடுகளிலிருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியை மின்ட் கம்யூனிகேஷன் (Mint Communication) நிறுவனம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய அளவில் பல்வேறு கல்வி நிறுவனங்களும் பள்ளிகளும் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளனர்.
70 கண்காட்சி முகப்புகளில் “30 நாள்களில் தமிழ்மொழி கற்கலாம்” எனும் புதுமையான கண்காட்சி வந்திருந்த அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
பண்டார் எண்ஸ்டேக் தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர் டாக்டர் கஸ்தூரி இராமலிங்கம் இந்த புதுமையான படிப்பை முன்வைத்துள்ளார்.
எளிய நடைமுறைகள், ஒலி-ஒளி வழிக் கற்பித்தல் முறைகள், மற்றும் தொடர்பு அடிப்படையிலான பயிற்சிகளின் மூலம், 30 நாள்களில் தமிழைப் பேசவும் எழுதவும் கற்றுக்கொள்ளும் இந்த முறைமையை இக்கண்காட்சி வழி மக்களுக்கு கொண்டு சேர்க்க வழிவகுத்துள்ளது.
தமிழ்மொழி என்பது ஓர் அனைத்துலக மொழியாகவும் நம் நாட்டின் இனம் , மதம் பாராமல் அனைத்து மக்களும் கற்றுப் பயன் பெறும் வகையில் இது போன்ற கண்காட்சி வாய்ப்பாக அமைந்தது என்று கஸ்தூரி கூறினார்.
தமிழ்மொழியைக் கற்கும் மிகுந்த ஆர்வத்தில் நம் நாட்டின் சீன மலாய் இனத்தவர் மட்டுமின்றி, கொரியா, சூடான், ஈரான், பிரான்ஸ்,தென்னிந்தியா, வட இந்தியா என அனைத்துலக பார்வையாளர்களும் இக்கண்காட்சியின் நேரடியான பட்டறைகளில் கலந்து கொண்டு, தமிழ்மொழியின் அடிப்படை எழுத்துகள், சொற்களை மிக எளிமையான முறையிலும் விரைவாகவும் கற்று பயனடைகிறார்கள் என்றார் அவர்.
இக்கண்காட்சி, தமிழ்மொழி கற்பதற்கான புதிய ஊக்கத்தை அனைவரிடமும் உருவாக்கியதுடன், இளம் தலைமுறையினரிடையேதமிழ்மொழி மீதான ஆர்வத்தையும் பெரிதும் தூண்டியது குறிப்பிடத்தக்கது.

