மலேசிய பாதுகாப்பு படையில் முதல் ட்ரோன் பயிற்சியாளர் குழுவை உருவாக்கிய ஸ்ரீ கணேசுக்கு கௌரவ பதவி!

கோலாலம்பூர், நவ 13-

மலேசிய மாஹிர் அறக்கட்டளையின் தலைவர் டத்தோ பி. ஸ்ரீ கணேசுக்கு, மலேசிய குடிமைப் பாதுகாப்பு படையினால் (APM) பட்டமளிக்கப்பட்ட கௌரவ லெப்டினன்ட் கர்னல் (PA) என்ற பதவி வழங்கப்பட்டுள்ளது.

இது ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் பாதுகாப்பு படையின் திறனை மேம்படுத்திய அவரது பங்களிப்புக்கு அங்கீகார வழங்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

அவரின் தலைமையில் பாங்கி ALPHA பயிற்சி மையத்தில் நடைபெற்ற தீவிர ட்ரோன் பயிற்சியின் மூலம் மலேசிய பாதுகாப்பு படையில் முதல் சான்றளிக்கப்பட்ட ட்ரோன் பயிற்சியாளர்கள் உருவாக்கப்பட்டனர்.

இரவு மீட்புப் பணிகளிலும், வெள்ளப்பாதிப்பு போன்ற அவசரநிலைகளிலும் வேகமான தகவல் பரிமாற்றம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் மலேசிய பாதுகாப்பு படையினருக்கு இந்த ட்ரோன் பயிற்சி மிகவும் உறுதுணையாக இருக்கும் என ஸ்ரீ கணேஷ் தெரிவித்தார்.

மேலும், வாயு கசிவு போன்ற ஆபத்தான சூழலில் ட்ரோன் மூலம் நிலை மதிப்பீடு செய்து, மீட்புக்குழுவின் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும் என்றார்.

இதனிடையே தனது தலைமையில் செயல்படும் மாஹிர் அறக்கட்டளையும், மலேசிய பாதுகாப்பு படையையும் இணைந்து நடத்திய பொதுத்–தனியார் கூட்டாண்மையினால் (PPP), மலேசிய குடிமைப் பாதுகாப்பு படையில் முதல் அங்கீகரிக்கப்பட்ட ட்ரோன் பயிற்சி மையம் (RPTO) தொடங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

இதன் வழி தான் பெற்ற இந்த சாதனை, மலேசிய பாதுகாப்பு அமைப்பை நவீன தொழில்நுட்ப திசையில் முன்னேற்றும் வரலாற்றுச் செயல் எனப் பாராட்டப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles