
கோலாலம்பூர், நவம்பர் 19 — எல்ஆர்டி3 ரயில் சேவை டிசம்பர் 31ஆம் தேதி முதல் இயக்கத் தொடங்கும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
இந்தத் திட்டம் தற்போது இறுதிக்கட்ட சோதனை மற்றும் சரிபார்ப்பு நிலையிலுள்ளது; சேவை நம்பகத்தன்மையும் பாதுகாப்பும் முழுமையாக உறுதி செய்யப்பட்ட பிறகே இயக்க தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
“இத்திட்டம் தொடங்கும் தேதியை உறுதிப்படுத்துவதற்கு முன், பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் தொழில்நுட்ப விதிகளை பூர்த்தி செய்வது மிகவும் முக்கியம். ரயில் சேவைகளில், இறுதி கட்ட சோதனைகள் குறிப்பாக பிழையற்ற இயக்கச் சோதனை மிக அவசியமானவை. சேவைத் தொடக்கத்தில் எந்தக் கோளாறும் இல்லாதிருக்க இதுவே முக்கிய காரணம்,” என்று அவர் கூறினார்.
மேலும் எல்ஆர்டி3 இயக்கத்திற்கான தயாரிப்பாக, ரேபிட் ரயில் நிறுவனம் இதுவரை செயல்பாடு, தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் ஆதரவு பிரிவுகளுக்காக 956 பணியாளர்களை நியமித்துள்ளது.
இதற்கிடையில், நவம்பர் 14ஆம் தேதி நிகழ்ந்த கனமழைக்குப் பிறகு KLIA 1 கட்டிடத்தின் கூரையிலிருந்து நீர் கசிவு சம்பவம் குறித்து அவர் கூறியது, அந்தப் பகுதியில் பணியாற்றிய ஒப்பந்தக்காரருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மலேசிய விமான நிலைய நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
Bernama

