
ஷா ஆலம், நவ 21-
கடந்த நவம்பர் 14 ஆம் தேதி சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி தாக்கல் செய்த 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இந்திய சமுதாயம் நன்மை அடையும் வகையில் உள்ளது மிகவும் பாராட்டுக்குரியது என்று ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில அரசு, இந்திய சமூக முன்னேற்றத் திட்டங்களை வலுப்படுத்தும் நோக்கில், 2026ஆம் ஆண்டுக்கான நிதியை 2.7 மில்லியன் ரிங்கிட் என உயர்த்தியுள்ளது. இது, இவ்வாண்டின் 2.185 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டைக் காட்டிலும் அதிகமாகும்.
இந்த நிதி அதிகமாக கல்வி உதவி மற்றும் நலத்திட்டங்களை மையமாகக் கொண்டு வழங்கப்படவுள்ளதாக சிலாங்கூர் மாநில மனிதவளம், மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு வீரமான் கூறினார்.
“சிலாங்கூர் அரசு, குறிப்பாக பி40 மாணவர்கள் தரமான கல்வியிலிருந்து விலகாமல் இருப்பதை உறுதி செய்ய முழு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.
இந்த உதவி, அவர்களுக்கு மேலும் உயர்கல்வி தொடரும் வாய்ப்பை வழங்குகிறது.
மொத்த ஒதுக்கீட்டில், 1.2 மில்லியன் ரிங்கிட் அதாவது 12 லட்சம் வெள்ளி பி40 குடும்பங்களைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பள்ளி பேருந்து பயண உதவித் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், 1.5 மில்லியன் ரிங்கிட் அதாவது 15 லட்சம் வெள்ளி உயர் கல்வி நிறுவனங்களின் கட்டண உதவித் திட்டத்திற்காக வழங்கப்படுகிறது.
இதனுடன், மாநில அரசு தீபாவளி, பொங்கல், தைப்பூசம், வைசாகி, உகாதி மற்றும் ஓணம் போன்ற பன்முகப் பண்பாட்டு நிகழ்வுகள் மற்றும் விழாக்களுக்காகவும் 1.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளது.
இவற்றில் சில விழாக்கள் முதல் முறையாக மாநில அளவில் சேர்க்கப்பட்டுள்ளன.
“இந்த பண்பாட்டு ஆதரவு, வெறும் கொண்டாட்டத்தை மட்டும் குறிக்கவில்லை; இது இந்திய சமூகத்தின் ஒற்றுமையையும் பண்பாட்டு அடையாளத்தையும் மேலும் வலுப்படுத்துகிறதுஎன்று அவர் தெரிவித்தார்.

