

சியாம் ரெப், நவ 24-
கம்போடியா அங்கோர் தமிழ்ச் சங்கம் மற்றும் சீனு ஞானம் ட்ராவல்ஸ் நிறுவனம் மற்றும் சவுத் ஈஸ்ட் ஆசியா பல்கலைக் கழகம் ஆகிவற்றின் இணைந்த ஏற்பாட்டிலும் சிந்தனையிலும் திட்டமிடப்பெற்ற ‘கடாரம் கொண்டான்’ ராஜேந்திர சோழன் பெருவீரனின் 1000வது வெற்றிக் கொண்டாட்டம் மிகவும் விமரிசையாக நடைபெற்று முடிந்தது.
கம்போடியா தேசத்தின் அங்கோர்வாட் நகரில் நவம்பர் 22 ஆம் திகதி சனிக்கிழமை காலை கோலாகலமாக ஆரம்பமாகியது
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் மலேசிய பேராளர்கள் உட்பட அறிஞர்களும் தமிழக அரசியல் தலைவர்களும் ஊடகவியலாளர்களும் கலை இலக்கியவாதிகளும் 509 க்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்த மாநாட்டை இங்கு சிறப்பாக நடத்துவதற்கு அங்கோர் தமிழ்ச் சங்கத்தை நிறுவிய தங்கவேலு சினினிவாசன் ராவ்-ராஜசேகரன் ஞானசேகர் மற்றும தாமரை ஆகியோர் முக்கிய பங்கு வகித்தார்கள்.
இரண்டு நாட்கள் கொண்டாட்டத்திற்கு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் க. சோ. கண்ணன் மற்றும் கொங்கு ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு பயனுள்ள உரைகளை ஆற்றினார்கள்.
அவர்களோடு மலேசியத் திருநாட்டின் முன்னாள் சுகாதார அமைச்சர் டான்ஸ்ரீ சுப்பிரமணியம் அவர்கள் மற்றும் அகழவாய்வாளர் பெரியார் வேதநாயகம் ஆகியோரும் கலந்து கொண்டு கடாரம் கொண்டான் ராஜேந்திர சோழன் பெருவீரனின் பெருமைகளை எடுத்துரைத்தார்கள்.
கம்போடிய தேசத்தின் மரபு சார்ந்த நாட்டியம் மற்றும் பரத நாட்டியம் ஆகியவையும் சபையோரால் பாராட்டப் பெற்றன.
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் அரங்காவலர் டத்தோ கண்ணா சிவகுமார் தலைமையில் 30க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் சிவ ஸ்ரீ சிவகுமார் குருக்கள், ரவி குருக்கள், அறங்காவலர் சந்திரசேகரன், கதிரேசன், செயலாளர் சேதுபதி, வாரிய உறுப்பினர் டாக்டர் முனியப்பா ஆகியோரும் அடங்குவர்.
ம இகா தேசிய மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ எஸ்.எம். முத்துவும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

