

காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர், நவ 28-
நாட்டில் மிகவும் பழமை வாய்ந்த வர்த்தக தொழில் சங்கமாக சிலாங்கூர் – கூட்டரசு பிரதேச இந்திய வர்த்தக சங்கம் விளங்குகிறது.
சிலாங்கூர் – கூட்டரசு பிரதேச இந்திய வர்த்தக தொழிற்சங்கம் (KLSICCI),
தற்போது டிஜிட்டல் துறை மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு நல அமைச்சு ஆகியவற்றின் ஆதரவுடன் அதிக வளர்ச்சி கண்டு வருவதாக அதன் தலைவர் நிவாஸ் ராகவன் தெரிவித்தார்.

KLSICCI சார்பில் தீபாவளி விருந்தோம்பல் நிகழ்ச்சி நேற்று நவம்பர் 27ஆம் நாள் பத்துமலை ஷாங்கா மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற பின்னர் ஊடகங்கவியாளர்களிடம் பேசிய நிவாஸ், அமைச்சர் கோபிந்த் சிங் டியோவும் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். இரமணனும் கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தின் உருமாற்றத்திற்கு தேவையான அனைத்தையும் செய்து வருவதாகத் தெரிவித்தார்.
“தற்பொழுது நடைபெறும் தீபாவளி நிகழ்ச்சிக்குக்கூட அமைச்சர் கோபிநாத் சிங் டியோதான் நிதி உதவி செய்தார்.

இருப்பினும் சபா சட்டமன்ற தேர்தல் காரணமாக அவரால் இந்த நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை” என்றும் நிவாஸ் தெரிவித்தார்.
இந்த வர்த்தக அமைப்பிற்கு நான்காண்டுகள் தொடர்ந்து செயலாளராக இருந்தபின் தற்பொழுது நான்காண்டுகள் தலைவராக நீடிப்பதாகக் குறிப்பிட்ட நிவாஸ்,
KLSICCI சட்டத் திட்டத்தின்படி இரு தவணைக்கு மேல் தலைவர் பொறுப்பை வகிக்க முடியாது என்பதால், கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தில் அடுத்த ஆண்டு கூட்டத்தின்பொழுது தலைமை மாற்றம் ஏற்பட இருப்பதாகவும் இந்த மாற்றம் சுமூகமான முறையில் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
கோலாலம்பூர்-சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தில் தன்னுடைய தலைமையில் ஏராளமான உருமாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்தார்.
உறுப்பினர் அடிப்படையில் பலவீனமாக இருந்த இந்த வர்த்தக சங்கத்தில் 800-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்களையும் வர்த்தகர்களையும் இணைத்து இதை நல்ல நிலையில் வலிமைப்படுத்தி உள்ளதாகவும் ஏராளமான இளம் தொழில் முனைவோரை KLSICCI மீது ஆர்வம் கொள்ள வைத்ததாகவும் நிர்வாகக் குழுவில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதாகவும் நிவாஸ் தெரிவித்தார்.

கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தின் தற்போது மோகனா சின்னத்தம்பி செயலாளர் பொறுப்பை வகிக்கிறார் என்றும் அதைப்போல மத்திய நிர்வாகக் குழுவில் மூன்று பெண்கள் இடம்பெற்று இருப்பதாகவும் இந்திய இளம் பெண்களை வர்த்தகத் துறையில் அதிக நாட்டம் கொள்ளும்படி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய மடாணி ஒற்றுமை அரசாங்கத்தின் மீது இந்திய சமூகத்தில் பரவலாக அதிர்ப்த்தி நிலவுவதாகவும் இதில் உண்மை இல்லை என்பதை விளக்கும் வகையில் அமைச்சர் கோபிந்த் சிங், துணை அமைச்சர் இரமணன் ஆகியோர் மூலமாக இந்திய சமுதாயம் என்னென்ன நன்மைகளை அடைந்து வருகிறது என்பதை எல்லாம் முடிந்த அளவு தாங்கள் ஏற்பாடு செய்கின்ற நிகழ்ச்சிகளில் எடுத்துச் சொல்லி வருவதாகவும் நிவாஸ் தெரிவித்தார்.

