
சுங்கை,நவ28: பொது மக்களின் சுகாதார நலனுக்காக சுங்கை அரசு கிளினிக்கில் கண் பரிசோதனை சிகிச்சை தொடங்கப்பட்டிருப்பதாக சுங்கை சட்டமன்ற உறுப்பினரும் சுகாதாரத் துறை ஆட்சிக்குழு உறுப்பினருமான மாண்புமிகு டத்தோ அ.சிவநேசன் தெரிவித்தார்.
இதுநாள் வரை கண் சார்ந்த பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக இங்குள்ளவர்கள் சிலிம் ரீவர் பொது மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருந்ததை நினைவுக்கூர்ந்த அவர் இனி அவர்கள் சுங்கை அரசு கிளினிக்கில் அச்சிகிச்சையைப் பெறலாம் என்றார்.
தஞ்சோங் மாலிம் தொடங்கி தாப்பா வரை சுமார் 10 அரசு கிளினிக் இயங்கி வரும் நிலையில் சுங்கையில் மட்டுமே கண் பரிசோதனை சிகிச்சை அதற்குரிய நவீன கருவிகளோடு மேற்கொள்ளப்படுவதாக கூறினார்.
மேலும்,இந்திய ப் பெண் கண் நிபுணத்துவ மருத்துவர் ஒருவர் நோயாளிகளைக் கண்காணிக்கவும் நியமிக்கப்பட்டிருபதாக டத்தோ சிவநேசன் மேலும் தெரிவித்தார்.
நடப்பில் நீரழிவு நோய் பெரும் சிக்கலாய் உருவெடுத்து வருகிறது.அந்நோயினால் பாதிக்கப்படுவோர் தங்களின் பார்வையை இழக்கும் சூழலையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.சுங்கையில்,கண் பரிசோதனை மருத்துவ சேவையும் இருப்பதால் தொடக்கத்திலேயே பார்வை சிக்கலை கண்டாராய்ந்து சிகிச்சையை அளித்திட முடியும் என்றும் சிவநேசன் நினைவுறுத்தினார்.
அதேவேளையில்,சுங்கை வட்டாரத்தில் கண் சார்ந்த சிக்கல்களை எதிர்நோக்கும் பொது மக்கள் குறிப்பாக முதியவர்களும் சிறுவர்களும் சிலிம் ரீவர் பொது மருத்துவமனைக்குச் செல்லாமல்,சுங்கை அரசு கிளினிக்கிலேயே சிகிச்சையும் மருத்துவ ஆலோசனைகளையும் பெறலாம் என்றார்.
கண் பரிசோதனை மற்றும் மருத்துவ அறைக்கு மின் விசிரி மற்றும் தளவாடப் பொருட்களை சிவநேசனின் பிரதிநிதியாக சுங்கை வட்டார பெங்கூலுவும் அவரது அதிகாரியும் வழங்கியப் பின்னர் அதுகுறித்த தகவல்களை டத்தோ சிவநேசன் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
சுங்கை கிளினிக்கின் கண் மருத்துவ பரிசோதனை அறைக்கு மின் விசிரி,மேசை,அலமாரி உட்பட தேவையான தளவாடப் பொருட்களை சிவநேசன் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேட்டவுடனே மறுப்பு தெரிவிக்காமல் எங்களின் தேவைகளை நிறைவு செய்த டத்தோ சிவநேசனுக்கு நன்றி பகிர்வதாக சுங்கை அரசு கிளினிக் மருத்துவர்களும் மருத்துவ பணியாளர்களும் தெரிவித்தனர்.

