மூன்று இந்திய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப் பட்ட சம்பவம்! அரச விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் – செனட்டர் லிங்கேஸ்வரன் வலியுறுத்து

கோலாலம்பூர் டிச 9-
மலாக்கா டூரியான் துங்கலில் மூன்று இந்திய இளைஞர்கள் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக உடனடியாக RCI எனப்படும் அரச விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று ஜசெக செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் மேலவையில் வலியுறுத்தி உள்ளார்.

அரச விசாரணை ஆணையம் அமைப்பது போலீஸ் படை மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க அவசியம் ஆகும்.

அதே சமயம், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

பொது மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், போலீஸார் உடல் கேமராவைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.

சுட்டுக் கொல்லப்பட்ட ஒருவர் தன் மனைவியுடன் கடைசி நிமிடத்தில் உரையாடிய ஆடியோ பதிவு இப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஆடியோ குரல் பதிவுக்கும், போலீஸார் கூறிய தகவலுக்கும் பெரிய முரண்பாடு உள்ளது.

அதாவது பாராங் கத்தியால் தாக்குதல் நடந்ததாக கூறப்படும் சத்தம் எதுவும் அந்த ஆடியோ பதிவில் இல்லை, வெறும் துப்பாக்கிச் சத்தம் மட்டுமே கேட்பதை செனட்டர் லிங்கேஷ்வரன் சுட்டிக் காட்டி பேசினார்.

ஒருவேளை அந்த குரல் பதிவு உண்மையென்றால், நடந்தது ‘நீதித்துறைக்கு அப்பாற்பட்ட கொலையாகும்; எனவே சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

அச்சம்பவம் கொலை வழக்காக விசாரிக்கப்படாமல், ஏன் கொலை முயற்சியாக பதிவுச் செய்யப்பட்டது, குரல் பதிவைப் பெற போலீஸார் ஏன் அக்குடும்பங்களைத் தொடர்புகொள்ளவில்லை?

எதற்காக அக்குடும்பங்களே புக்கிட் அமான் வரை சென்று அதனை ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது? குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு விட்டனவா? என்பது குறித்தும் அவர் கேள்வியை எழுப்பினார்.

சுட்டுக் கொல்லப்பட்ட மூவருமே குற்றப்பதிவுகளைக் கொண்டிருந்தார்களா? என கேட்ட லிங்கேஷ்வரன், அவர்களில் ஒருவருக்கு எந்தவொரு குற்றப்பதிவும் இல்லையென தெரிய வருவதாக சொன்னார்.

எனவே, இத்தனை கேள்விகளுக்கும் உள்துறை அமைச்சு தகுந்த பதிலை தந்து, மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles