
புத்ரா ஜெயா, டிச 18-
இந்திய உணவகங்கள் மற்றும் இந்திய பாரம்பரிய தொழில் துறைகள் எதிர் நோக்கி இருக்கும் அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண உள்துறை அமைச்சருடன் இணைந்து பாடுபடுவேன் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் தெரிவித்தார்.
இந்திய தொழில் துறைகள் எதிர் நோக்கி இருக்கும் அந்நியத் தொழிலாளர்கள் விவகாரம் எனக்கு நன்றாக தெரியும்.
அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினையை உள்துறை அமைச்சு கவனிக்கிறது.
உள்துறை அமைச்சு தான் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள அனுமதி வழங்குகிறது.
இருப்பினும் இந்திய உணவகங்கள், முடி திருத்தும் நிலையங்கள், நகைக் கடைகளுக்கு அந்நியத் தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
உள்துறை அமைச்சராக இருப்பவர் கெஅடிலான் கட்சியைச் சேர்ந்தவர். நானும் அதே கட்சி.
ஆகவே அவரின் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த பிரச்சனைக்கு தீர்வு காண பாடுபடுவேன்.
இந்திய தொழில் துறையினர் அந்நியத் தொழிலாளர்களுக்கான விண்ணப்பங்களை முறையாக செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இன்று மனிதவள அமைச்சில் அதிகாரப்பூர்வமாக பணியைத் தொடங்கிய பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

