நோர்த் ஹம்மோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவி ஸ்ரீ கிரித்திகா 8 விருதுகளை வென்று சாதனை

ஷா ஆலம், டிச 18 – அண்மையில் ஷா ஆலமில் அமைந்துள்ள நோர்த் ஹம்மோக்( North Hummock ) தோட்டத் தமிழ்ப்பள்ளியில், ஆறாம் ஆண்டு முடித்து அடுத்த ஆண்டு இடைநிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்காகப் பட்டமளிப்பு விழாவும் பரிசளிப்பு விழாவும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

பள்ளி தலைமையாசிரியை திருமதி சூரியகுமாரி, துணைத் தலைமையாசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரியம் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் நோர்த் ஹம்மோக் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் ஆசிரியர் பத்மநாதன் சுப்ரமணியம் மற்றும் கிள்ளான் ஜீனியஸ் கல்லூரியின் இயக்குநர் வில்சன் போல் யூபோக் ஆகியோரும் சிறப்பு வருகை புரிந்து மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தனர்.

நோர்த் ஹம்மோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கிள்ளான் மாவட்ட நிலையில் கல்வியில் சிறந்த அடைவு நிலை பெற்றதோடு புறப்பாட நடவடிக்கைகள் மற்றும் புத்தாக்கக் கண்டுப்பிடிப்பு உட்பட பல்வேறு போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று பள்ளிக்கு பெருமையை தேடித் தந்தது குறித்தும் தலைமையாசிரியை திருமதி சூரியகுமாரி தனது உரையில் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டார்.

மாணவர்களின் அடைவு நிலைக்கு பெற்றோர்களின் முக்கிய ஒத்துழைப்பும் வரவேற்கக்கூடிய நிலையில் இருந்ததாக அவர் கூறினார் . பள்ளியின் பரிசளிப்பு விழாவில் கல்வி மற்றும் புறப்பாட நடவடிக்கையில் சிறந்த அடைவு நிலையைப் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

இந்த பரிசளிப்பு விழாவில் ஆறாம் ஆண்டு அப்துல் கலாம் வகுப்பு மாணவியான ஸ்ரீ கிரித்திகா (Sri Grethika) ஜெயப்பிரகாசம் முன்னோடி நட்சத்திர மாணவியாக தேர்வு பெற்றதோடு பல்வேறு பிரிவுகளில் 8 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார்.

இந்த ஆண்டு முழுமையாகப் பள்ளி நாட்களில் வருகை புரிந்தது , 6ஆம் வகுப்பு மாணவிகளில் முதல் ஆறு இடங்களில் ஒன்றை பெற்றது, வகுப்பில் அதிக புத்தகங்களை வாசித்தது, நீலம் 5 நட்சத்திர விருது, கல்வியில் சிறந்த அடைவு நிலை, அனைத்து பாடங்களிலும் சிறந்த அடைவு நிலை, அதிகமாக வசித்த பிரிவு ஆகியவற்றில் மாணவி ஸ்ரீ கிரித்திகா விருதுகளை வென்று தனது பெற்றோர் டத்தோ டாக்டர் ஜெயப்பிரகாசம் – உஷாராணி தம்பதியருக்குப் பெருமை சேர்த்துள்ளார். மேலும் பள்ளி புறப்பாட நடவடிக்கைகளிலும் அவர் சிறந்த முறையில் பங்கெடுத்துள்ளார் .

இது தவிர கடந்த ஆண்டு கிள்ளான் மாவட்டக் கபடி போட்டியில் மூன்றாவது இடத்தையும், இவ்வாண்டு நடைபெற்ற மாவட்டக் கபடி போட்டியில் இரண்டாவது இடத்தையும் அவர் பெற்றுள்ளார்.

மேலும், மாவட்ட நிலையிலான புத்தாக்கக் கண்டுப்பிடிப்பு போட்டியில் கடந்த ஆண்டு தங்கப் பதக்கத்தையும் இவ்வாண்டு வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுள்ளார்.

இது தவிர கணித மேதை ராமாநுஜம் போட்டியில் கிள்ளான் மாவட்ட ரீதியில் இரண்டாவது இடத்தையும் ஸ்ரீ கிரித்திகா பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles