
கோலாலம்பூர், டிச.21-
சில தினங்களுக்கு முன்னர் ஒரு மலாய் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்கள் மிகவும் தெளிவாக மற்ற இதர இந்திய கட்சிகளை தேசிய முன்னணியில் இணைப்பதில் ம.இ.காவுற்கு எந்த அச்சியேபமும் இல்லை என கூறியுள்ளார்.
அந்த தகவலுக்கு பிறகு, இன்று பினாங்கில் நடைபெற்ற மக்கள் சக்தி மாநாட்டில் ஒரு புதிய குற்றச்சாட்டை ம.இ.கா மீது வைத்து விட்டார் தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி என ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.
ம.இ.காவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் பல ஆண்டுகளாக அனைத்து இந்திய கட்சிகளும் ஒரு குடையின் கீழ் வரவேண்டும் என பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.
அதை இந்திய கட்சிகளும் நன்கு அறிவார்கள்.
ஆனால் அண்மையில் ஐ.பி.எப் மாநாட்டில் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி பேசுகையில், சில இந்திய கட்சிகள் தேசிய முன்னணியில் இணைவதற்கு உறுப்பு கட்சிகள் தடையாக இருப்பதாக ஒரு குற்றச்சாட்டை வைத்தார்.
அதற்கு பிறகு டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ம.இ.கா எந்த ஒரு இந்திய கட்சியும் உள்ளே வர எப்போதும் தடுக்கவில்லை.
தாராளமாக அவர்களை இணையுங்கள் என ம.இ.காவின் நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்து விட்டார்.
ஆனால் இன்று மக்கள் சக்தி மாநாட்டில் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் குற்றச்சாட்டை ம.இ.கா பக்கம் திருப்பி விட்டுவிட்டார் தேசிய முன்னணி தலைவர்.
எங்களை பொறுத்த வரை ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெளிவாக சொல்லிவிட்டார், எந்த இந்திய கட்சிகளும் உள்ளே வர ம.இ.கா தடையாக இருந்தது இல்லை என டத்தோ ஸ்ரீ சரவணன் பதிலடி கொடுத்தார்.

