
அண்மையில் தைவானின் நடைபெற்ற உலக ரோபோடிக் (WRG) 2025 விளையாட்டுப் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் 80 மேற்பட்ட பதக்கங்களை வென்ற பினாங்கு மாநிலத்தை சேர்ந்த 24 தமிழ்ப்பள்ளி மாணவர்களை கல்வியமைச்சு கண்டுகொள்ளாதது வேதனை அளிக்கிறதென உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகத்தின் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.
அனைத்துலக அரங்கில் பங்கெடுத்து பதக்கங்களை வென்று, பள்ளிக்கு மட்டுமல்ல தனது நாட்டுக்கே பெருமை சேர்க்கும் மாணவர்களின் தனித் திறன், முயற்சி, அர்ப்பணிப்புகளை கண்டுகொள்ளாததும் அதற்கு உரிய அங்கீகாரமும் பாராட்டையும் வழங்காமல் புறக்கணிப்பதும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்றார்.
அதிலும் அத்துறை சார்ந்த கல்வியமைச்சே கண்டுகொள்ளாதது வன்மையான கண்டனத்துக்குரியது.
இதற்காக பல காலம் அயராது பாடுபட்ட மாணவர்கள் ஆசிரியர்கள் பயிற்றுநர்கள் என பல வகையில் துணை நின்ற அனைவரையும் காயப்படுத்தக் கூடியதாகும். மேலும் இனிவரும் வளரும் இளைய தலைமுறை பிள்ளைகளின் கனவையும் சாதனையையும் மட்டுப்படுத்துவதாகவும் அமைகிறது என்றர்.
இவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்காதது தமிழ்ப்பள்ளி மாணவர்கள் என்பதனாலே பாராபட்சம் என்ற கருத்து வழுக்கு முன் மலேசிய கல்வியமைச்சு உடனே வெற்றிகொண்ட மாணவர்களுக்கும் பள்ளிக்கும் உரிய அங்கீகாரத்தையும் பாராட்டையும் வழங்க வேண்டுமென உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் சார்பில் திரு.பாலமுருகன் வீராசாமி தமது அறிக்கையில் கேட்டுக்கொண்டார்.

