
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் ஜன 25-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரும் ஜனவரி 30 ஆம் தேதி பத்துமலை திருத்தலத்திற்கு மதியம் 2.30 மணிக்கு மேல் சிறப்பு வருகை புரிகிறார் என்று ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் டத்தோ கண்ணா சிவகுமார் தெரிவித்தார்.
பத்துமலை திருத்தலத்திற்கு வருகை புரியும் பிரதமருக்கு தேவஸ்தானத்தின் சார்பில் சிறப்பு செய்யப்படும்.
பிரதமருடன் அமைச்சர்கள் மற்றும் மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மற்றும் துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் சிறப்பு வருகை புரிகிறார்கள்.
பத்துமலை திருத்தலத்தில் தைப்பூச ஏற்பாடுகள் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பார்வையிடுவார் என்று அவர் சொன்னார்.
இதனிடையே வரும் ஜனவரி 30 ஆம் தேதி இரவு பத்து மணிக்கு மேல் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் இருந்து வெள்ளி ரதம் பத்துமலை திருத்தலத்தை நோக்கி புறப்படும்.
வழிநெடுகிலும் சிறப்பு பூஜைகளுக்கு மத்தியில் வெள்ளி ரதம் ஜனவரி 31 ஆம் தேதி மாலை ஐந்து மணிக்கு பத்துமலை வந்தடையும் என்று எதிர்பார்க்கிறோம்.
அதன் பின்னர் சேவல் கொடி ஏற்றப்பட்டதும் தைப்பூசம் களைகட்டும்.
இம்முறை நீண்ட விடுமுறை வருவதால் குறைந்தது 25 லட்சம் பேர் பத்துமலை தைப்பூசத்
தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.
பத்துமலை தைப்பூசத்திற்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குப்பைகளை குப்பை தொட்டியில் போடும் படி கேட்டுக் கொள்கிறோம்.
இரண்டு தினங்களுக்கு கேடிஎம் இலவச ரயில் சேவை வழங்குவதால் பொதுமக்கள் ரயில் சேவை மற்றும் பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்தி கொள்ளலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

