


பத்துகேவ்ஸ், பிப் 1-
பத்துமலை திருத்தலத்தில் மின் படிக்கட்டு திட்டம் நிறைவேற டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் பெரிதும் உதவுவார் என்று எதிர்பார்ப்பதாக ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர் நடராஜா தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பத்துமலை திருத்தலத்திற்கு வருகை புரிந்தார்.
அவருடன் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி மற்றும் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் ஆகியோரும் வருகை தந்தனர்.
மின் படிக்கட்டு திட்டம் தொடர்பாக சிலாங்கூர் மாநில அரசும் கோவில் நிர்வாகமும் நல்ல முறையில் பேசி தீர்வு காணும் படி பிரதமர் கேட்டுக் கொண்டார்.
அந்த வகையில் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் கோபிந்த் சிங் டியோ இந்த மின் படிக்கட்டு திட்டம் நிறைவேற பெரிதும் உதவ வேண்டும் என்று டன்ஸ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டார்.
இதனிடையே டிஜிட்டல் துறை அமைச்சராக கோபிந்த் சிங் டியோ பதவி ஏற்று இந்த இரண்டு வருடத்தில் இருபது லட்சம் வெள்ளியை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுத் தந்துள்ளார்.
இந்த தருணத்தில் அவருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இந்திய சமுதாயத்திற்கு சிறந்த முறையில் சேவையாற்றி வருகிறார் என்றும் அவர் கூறினார்.
தைப்பூசத்தை முன்னிட்டு இன்று பத்துமலை திருத்தலத்திற்கு அமைச்சர் கோபிந்த் சிங் டியோ சிறப்பு வருகை புரிந்தார்.
தேவஸ்தானத்தின் சார்பில் அவருக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் ஓங் சூன் வெய் ஆகியோரும் சிறப்பித்தனர்

