இந்த ஆண்டு இந்தியர்களுக்கான RM100,000 நிதியுதவி திட்டத்தை மித்ரா மீண்டும் தொடங்கும் – டத்தோ ஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர், பிப் 6 – இந்திய சமூகத்தினருக்கு உதவும் வகையில், இந்திய மக்கள் தொகை அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவான மித்ரா மூலம் ஒரு லட்சம் வெள்ளி நிதியுதவி வழங்குவது குறித்து மறுஆய்வு செய்யப்படுவதாக மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

“முன்னதாக 2024-ஆம் ஆண்டில், மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இடங்களில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஒரு லட்சம் வெள்ளி நிதியுதவி வழங்கத் திட்டமிடப்பட்டது,” என இந்திய சமூகத்திற்கான மடாணி அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளராகவும் இருக்கும் அவர் கூறினார்.

இது நாடாளுமன்றத் தொகுதிகளின் அடிப்படையில் அல்லாமல், உள்ளூர் இந்திய சமூகத்தின் எண்ணிக்கை அதிகமாக உள்ள மாவட்டங்களின் அடிப்படையில் அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

“ஆனால், இத்திட்டம் 2024-இல் செயல்படுத்தப்படவில்லை, ஏனெனில் வழிபாட்டுத் தலங்களை மேம்படுத்துதல், பள்ளி பராமரிப்பு உதவி, பாலர் பள்ளி திட்டங்கள், பொது வசதிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கான திட்டங்கள் என பல்வேறு மாறுபட்ட திட்டங்கள் இருந்தன,” என அவர் குறிப்பிட்டார்.

“இருப்பினும், இந்த ஆண்டு அதே திட்டத்தை மீண்டும் செயல்படுத்த நாங்கள் பரிசீலிப்போம். மித்ராவில் உள்ள எங்களை விட, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே தங்களின் பகுதியில் உண்மையிலேயே உதவி தேவைப்படும் இந்தியர்களைப் பற்றி நன்கு தெரியும் என்பதால், கூடுதல் ஒதுக்கீட்டுடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட முறையில் இது வழங்கப்படும்,” என்று அவர் மக்களவையில் நடைபெற்ற அமைச்சர்களுக்கான கேள்வி நேரத்தின் போது தெரிவித்தார்.

பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles