
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் பிப் 21-
நாட்டில் பெரும் பூதாகரமாக வெடித்துள்ள நிலப்பட்டா இல்லாத கோவில்கள் விவகாரம் தொடர்பாக பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த மலேசிய இந்தியர் நம்பிக்கை அறவாரியம் இலக்கு கொண்டிருப்பதாக அதன் தலைவர் டத்தோ இராமச்சந்திரன் தெரிவித்தார்.
நிலப்பட்டா இல்லாத கோவில்கள் உடைப்படாமல் இருக்கவும் இடம் மாற்றம் செய்ய ஏதுவாக இந்த அறவாரியம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கு நல்ல முறையில் தீர்வு காண பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.
முதல் கட்டமாக
கோவில்கள் யாருடைய நிலத்தில் அமைந்துள்ளது என்பதை கண்டறிய கோவில் நிர்வாகம் முதலில் நில ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
ஆர்ஓஎஸ் எனப்படும் தேசிய பதிவு இலாகாவில் கோவில்கள் பதிவு செய்யப்பட்டாலும் கோவில் அமைந்துள்ள நிலம் யாருக்கு சொந்தம் என்பதை முதலில் கண்டறிய வேண்டும்.
அதன் பின்னரே நிலத்திற்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.
உடைப்படும் அபாயத்தில் உள்ள கோவில்களை காப்பாற்ற இந்திய சமுதாய அமைப்புகள் ஓர் அணியில் திரள வேண்டும் என்றார்.
கோவில்கள் எதிர் நோக்கி இருக்கும் பிரச்சனைகள் தீர்க்க மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ ஆகியோரை சந்திக்கவும் தயாராக இருக்கிறோம்.
இவர்கள் இருவரும் அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பதால் கோவில்கள் விவகாரம் தொடர்பாக குரல் கொடுக்க முடியும்.
நிலம் பட்டா இல்லாத கோவில்கள் முறையாக விண்ணப்பம் செய்ய குறைந்தது ஒரு ஆண்டு ஆகும் என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

