மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்-(MACC) தன் சொந்த வழக்கில் நீதிபதியாக இருக்க முடியாது. கார்ப்பரேட் மாஃபியா சர்ச்சையில் RCI தலையீடு அவசியம் – கோபிந்த் சிங் டியோ

புத்ரஜெயா, பிப்ரவரி 25, 2026 – மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (MACC) மீது சமீபத்தில் புளூம்பெர்க் செய்த ‘கார்ப்பரேட் மாஃபியா’ குற்றச்சாட்டுகளை விசாரிக்க அரச விசாரணை ஆணையம் (RCI) அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஜசெக-DAP முன்னெடுக்கும்.

மேற்கண்ட கூற்றுக்களை ஆதாரமற்றது என்றும் ஒரு பெயர் குறிப்பிடப்படாத வலைப்பதிவிலிருந்து வந்தது என்றும் MACC நிராகரித்துள்ளது. MACC -க்கு அவ்வாறு செய்ய முழு உரிமையும் உள்ளது அத்தகைய மறுப்பை வெளியிட அவர்களுக்கு முழு உரிமை உண்டு. எனினும், அவர்களது மறுப்பு மட்டுமே போதுமானதல்ல. நீதியின் அடிப்படை கொள்கை என்னவென்றால், யாரும் தங்களது சொந்த வழக்கில் தாங்களே நீதிபதியாக இருக்கக்கூடாது என்பதே ஆகும்.

நேர்மையை நிலைநாட்டும் அமைப்பாகக் கருதப்படும் ஊழல் தடுப்பு ஆணையத்தின் நேர்மை சந்தேகிக்கப்படும் நிலையில், அந்த அமைப்பு தன்னைத் தானே குற்றமற்றதாக அறிவிப்பது போதுமானதாகாது.

அவ்வாறு கூறுவதால் மட்டும் பொதுமக்கள் நம்பிக்கையையோ அல்லது முதலீட்டாளர்களின் நம்பிக்கையையோ மீட்டெடுக்க உதவாது. செவ்வாய்க்கிழமை அந்தோணி லோக் (Democratic Action Party) ஜசெக செயலாளர் அறிவித்தது போல், எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. இந்தச் சர்ச்சைக்கு, சார்பற்ற வெளிப்படையான ஒரு விசாரணை தேவைப்படுகிறது.

குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தெளிவானவை. அவை குறிப்பிட்ட நபர்கள், நிறுவனங்கள் ஆகியவற்றை பெயரிட்டு, அடையாளம் காணக்கூடிய வழக்குகளையும் சுட்டிக்காட்டுகின்றன. விசாரணை தொடங்குவதற்கு போதுமான அடிப்படை தகவல்களும் உள்ளன. இந்த விவகாரத்தில் முறையான மற்றும் அர்த்தமுள்ள விசாரணை நடத்தத் தேவையான சட்ட அதிகாரங்கள் கொண்ட ஒரு அரச ஆணைய விசாரணைக் குழு (RCI) அமைப்பதே சிறந்தத் தேர்வாகும்.
குற்றச்சாட்டுகள் உண்மையா இல்லையா என்பது, அதன் பின்னர் என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதும், அமைக்கப்படும் RCI தீர்மானிக்க வேண்டிய ஒன்றாகும்.

இது யாரிடமும் குற்றம் சாட்டவோ அல்லது பழி தேடவோ மேற்கொள்ளப்படும் முயற்சி அல்ல. மாறாக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) எந்த சந்தேகத்திற்கும் இடமின்றி, அதன் நேர்மை மற்றும் நம்பகத்தன்மையை பாதிக்கும் குற்றச்சாட்டுகளிலிருந்து முற்றிலும் விடுபட்ட அமைப்பாகவே தொடர்கிறது என்பதை உறுதிப்படுத்துவதற்கான முயற்சியாகும்.

இந்த குற்றச்சாட்டுகள் உள்ளூரிலும் சர்வதேச அளவிலும் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்துள்ள காரணத்தால் அவற்றை சரியான முறையில் கையாளத் தேவையான மற்றும் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது மிக முக்கியம்.

இது MACC-ஐ பலவீனப்படுத்துவதற்காக அல்ல; மாறாக அதை மேலும் வலுப்படுத்துவதற்காகவே. விசாரணை மற்றும் அமலாக்க அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ள இந்த நாட்டின் அனைத்து அமைப்புகளும் எப்போதும் விசாரணைக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் உட்பட்டவையே என்பதை உறுதிபடுத்தும் நடவடிக்கையாகும்.

எனவே, எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும், மேலும் அந்த விசாரணை அரச ஆணைய விசாரணைக் குழுவினால் (RCI) மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த RCI, விவகாரத்தை முழுமையாகவும் வெளிப்படையாகவும் ஆராய தேவையான அனைத்து அதிகாரங்களையும் பெற்றிருப்பது அவசியம், மேலும் இந்த விசாரணை உடனடியாக தொடங்கப்பட வேண்டும் என கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles