
ஜொகூர் பாரு, 7 மார்ச் –
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், இன்று காலை இஸ்தானா பிளிண்ட்ஸ்டோன்ஸில் (Istana Flintstones), மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராகிம் அவர்களைச் சந்தித்து மரியாதை செலுத்தினார்.
இந்தச் சந்திப்பின் போது, மனிதவள அமைச்சின் தற்போதைய திட்டங்கள் மற்றும் எதிர்கால முன்னெடுப்புகள் குறித்து மாட்சிமை தங்கிய பேரரசர் அவர்களிடம் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.
குறிப்பாக, மக்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்கும், சேவை வழங்கல் முறையின் செயல்திறனை மேலும் மேம்படுத்துவதற்கும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மற்றும் வருங்காலத்தில் அமல்படுத்தப்படவுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து பேரரசர் அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
“என்னைச் சந்திப்பதற்கு அனுமதி வழங்கியமைக்காகவும், மக்கள் நலன் சார்ந்த கொள்கைகள் மற்றும் திட்டங்களைச் செயல்படுத்துவதில் மாட்சிமை தங்கிய பேரரசர் அவர்கள் காட்டும் மிகுந்த அக்கறைக்காகவும் எனது மனமார்ந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கின்றேன்,” என்று டத்தோஸ்ரீ ரமணன் இன்று தமது அதிகாரப்பூர்வ முகநூலில் தெரிவித்துள்ளார்.
மேலும், மாட்சிமை தங்கிய பேரரசர் அவர்கள் வழங்கிய அறிவுரைகளும் ஆலோசனைகளும், வடிவமைக்கப்பட்ட ஒவ்வொரு திட்டத்தையும் மக்கள் நலனுக்காகவும் நாட்டின் செழுமைக்காகவும் மிகச் சிறந்த முறையில் செயல்படுத்துவதை உறுதி செய்ய உதவும் மிக அர்த்தமுள்ள வழிகாட்டுதல்களாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பு, நாட்டின் முன்னேற்றப் பாதையில் அரசாங்கத்தின் திட்டங்களை இன்னும் வலுவாகக் கொண்டு செல்வதற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

