

கோலாலம்பூர் மார்ச் 10-
கண் பார்வையற்றோர் ஒற்றுமையாக இருக்கும் போது ஏன் உங்களால் ஒற்றுமையாக இருக்க முடியவில்லை என்று தர்மம் தலை காக்கும் சமூக நல இயக்கத்தின்
தலைவர் மகேந்திரன் கேள்வியை எழுப்பினார்.
இப்போது நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பல சம்பவங்கள் நடந்து வருகிறது. இது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாம் அனைவரும் மலேசியர்கள். இவ்வளவு நாள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தோம். ஆனால் இன்று நமக்குள் ஏகப்பட்ட பிரச்சனைகள். இதை கேட்கும் போது மனது வலிக்கிறது.
கண் பார்வை இழந்த நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.
எங்களிடையே எந்த ஒரு பிரிவினை வாதமும் இல்லை. ஒருவருக்கு ஒருவர் அன்பாக இருக்கிறோம். அவரவர் மதத்தை மதிக்கிறோம்.
ஆனால் இன்று நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடக்கும் சம்பவங்களை பார்த்தால் பெரும் வேதனையாக இருக்கிறது.
ஆகவே நாங்கள் ஒற்றுமையாக இருக்கும் போது ஏன் உங்களால் முடியாது என்று மகேந்திரன் கேள்வியை எழுப்பினார்.
தர்மம் தலைகாக்கும் சமூக நல இயக்கத்தின் ஏற்பாட்டில் நேற்று கண் பார்வையற்றோர் சங்கத்தின் மண்டபத்தில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட கண் பார்வையற்றோர் கலந்து கொண்டனர்.
மலாய் சீனர் இந்தியர் என்று பல இனங்களைச் சேர்ந்த கண் பார்வையற்றோர் ஒற்றுமையாக இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

