மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கோலாலம்பூர், ஏப்.3-
கடந்த மார்ச் 31-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த 2025-ஆம் ஆண்டு கிக் பணியாளர்கள் சட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், கிக் பணியாளர்கள் தீர்ப்பாயம் (TPG) மற்றும் கிக் ஆலோசனைக் குழுவில் (MPGig) உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட 76 தனிநபர்கள் இன்று தங்களின் நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறுகையில், கிக் பணியாளர்கள் தீர்ப்பாயத்திற்கான நியமனங்களில் இடைக்காலத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட 22 தொழில்துறை நீதிமன்றத் தலைவர்களும், தொழிலாளர் சட்டத்தில் அனுபவம் வாய்ந்த 28 தொழில்துறை உறவு அதிகாரிகளும் அடங்குவர் என்றார்.

இந்தத் தீர்ப்பாயம் கிக் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தத் தகராறுகளை நியாயமான, விரைவான மற்றும் குறைந்த செலவில் தீர்ப்பதற்கான தளமாகச் செயல்படும் என்று அவர் விளக்கினார்.

இன்று இங்கு பங்சார் விண்டம் தங்கும் விடுதியில்
நடைபெற்ற நியமனக் கடிதம் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தத் தீர்ப்பாயம் கிக் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த நிறுவனங்களுக்கு இடையிலான மோதல்களைக் கேட்கவும், மத்தியஸ்தம் செய்யவும் மற்றும் முடிவுகளை எடுக்கவும் அதிகாரம் கொண்டுள்ளது” என்று தெரிவித்தார்.

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நியமிக்கப்பட்ட 26 உறுப்பினர்களைக் கொண்ட கிக் ஆலோசனைக் குழு (MPGig) குறித்துப் பேசிய டத்தோஶ்ரீ ரமணன், அரசாங்கம், கிக் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த நிறுவனங்களுக்கு இடையே ஆலோசனைகளை மேற்கொள்வதற்கும், இத்துறை தொடர்பான கொள்கைகளை முன்மொழிவதற்கும் இந்தச் சபை ஒரு தளமாகச் செயல்படும் என்றார்.

இன்றைய கூட்டத்தில் கிக் பணியாளர்களுக்கான குறைந்தபட்ச வருமான விகிதம் குறித்து அரசாங்கம், பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு முடிவின் மூலம் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்களில் ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தத் தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழுவின் உருவாக்கம், நாடு முழுவதும் உள்ள 1.64 மில்லியனுக்கும் அதிகமான கிக் பணியாளர்களுக்குப் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசியாவிலேயே கிக் பணியாளர்களை முழுமையாகப் பாதுகாப்பதற்கான சிறப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் நாடுகளில் ஒன்றாக மலேசியா திகழ்வது மிகவும் அர்த்தமுள்ள ஒன்றாகும் என்று அவர் கூறினார்.

தற்போதைய வேலைவாய்ப்பு நிலப்பரப்பில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப கிக் பொருளாதாரத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்வதில் அரசாங்கத்தின் உறுதியை இது பிரதிபலிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், 2025 கிக் பணியாளர்கள் சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்னதாக எந்தவொரு கலந்தாய்வு அமர்வுகளும் நடத்தப்படவில்லை என்று மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (எம்டியுசி) முன்வைத்த குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.

மாறாக, அக்டோபர் 2024 முதல் ஆகஸ்ட் 2025 வரை எம்டியுசி பிரதிநிதிகள் உட்பட பல்வேறு தரப்பினருடன் சுமார் 400 கலந்தாய்வு அமர்வுகள் நடத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

“அத்தகைய கலந்தாய்வு அமர்வுகள் நடைபெறவில்லை என்றால், பிளாட்பார்ம் உரிமையாளர்கள், தொழில் சங்கங்கள் மற்றும் கிக் பணியாளர்களின் பிரதிநிதிகள் இந்தச் சட்ட அமலாக்கச் செயல்பாட்டில் பங்கேற்றிருக்க வாய்ப்பில்லை” என்று அவர் மேலும் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles