ஜோஅன்னா ஜெபமலர் எஸ்பிஎம் தேர்வில் 10ஏ சாதனை: மருத்துவராகும் லட்சியம்!

ரவூப், ஏப்ரல் 4-
சாதாரண குடும்பப் பின்னணியைக் கொண்ட ஜோஅன்னா ஜெபமலர் ஜேசுதாஸ், எஸ்பிஎம் தேர்வில் தமிழ் மொழி உட்பட 10 பாடங்களிலும் ‘ஏ’ தேர்ச்சி பெற்று ரவூப் வட்டாரத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

சீரோ தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய அவர், ரவூப் எம்.ஜி.எஸ். பெண்கள் இடைநிலைப்பள்ளியில் பயின்றார். அங்கு தமிழ்மொழியை ஒரு கூடுதல் பாடமாக எடுத்து, அனைத்துப் பாடங்களிலும் சிறந்த தேர்ச்சி பெற்றுள்ளார். எதிர்காலத்தில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவராவதே தனது இலட்சியம் எனக் கூறிய ஜோஅன்னா, அதற்கான மேற்கல்வி விண்ணப்பங்களைச் செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

அவரின் இந்தச் சாதனையைப் பாராட்டி, சீரோ தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டுப் பொதுக்கூட்டத் தொடக்க விழாவில் அவர் கௌரவிக்கப்படார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பத்து தாலாம் சட்டமன்ற உறுப்பினரும் ரவூப் அம்னோ தொகுதித் தலைவருமான டத்தோ அப்துல் அஜிஸ் கிராம், ஜோஅன்னாவிற்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கேடயம் வழங்கினார்.

ஜோஅன்னாவின் தந்தை ஜேசுதாஸ், பள்ளி பொதுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். நோய்வாய்ப்பட்ட மனைவியைக் கவனித்துக்கொண்டே, மகளைப் பள்ளிக்கும் கூடுதல் வகுப்புகளுக்கும் அழைத்துச் செல்வது என மகளின் கல்விக்காகத் தியாகம் செய்தவர்.

“என் மகளிம் விடாமுயற்சிக்குக் கிடைத்த வெகுமதி இது. ஆண்டவர் அருளால் அவள் லட்சியம் நிறைவேறும்,” என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

தலைமையாசிரியர் வே. பாலசுப்பிரமணியம் வாழ்த்துகையில், “எங்கள் பள்ளியின் முன்னாள் மாணவி ஜோஅன்னாவின் சாதனை ரவூப் மண்ணிற்குப் பெருமை. இவரைப் முன்மாதிரியாகக் கொண்டு பல இந்திய மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்,” என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles