இந்திய சமூகத் தலைவர்களின் பங்கை வலுப்படுத்த, தகுதித் தேர்வைச் சிலாங்கூர் அரசு அறிமுகம் செய்கிறது

உலு சிலாங்கூர், ஏப்ரல் 13: அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையே பாலமாக செயல்படும் இந்திய சமூகத் தலைவர்களின் (KKI) பங்கை வலுப்படுத்தும் நோக்கில், 2026 முதல் 2027 வரையிலான பதவிக் காலத்திற்கான நியமனத்தில் புதிய வழிமுறையாக தகுதித் தேர்வை சிலாங்கூர் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மாநில மனிதவள ஆட்சிக்குழு உறுப்பினர் வி. பாப்பாராய்டு, இந்த அணுகுமுறை ஒவ்வொரு வேட்பாளரும் தங்கள் பொறுப்புகளைப் புரிந்துகொள்வதோடு, திறம்பட செயல்படும் திறனையும் கொண்டிருப்பதை உறுதி செய்வதற்காகச் செயல்படுத்தப்படுகிறது என்றார்.

அவரது கூற்றுப்படி, இந்த தகுதித் தேர்வில் படித்தல், எழுதுதல் மற்றும் தொடர்புகொள்தல் போன்ற அடிப்படைத் திறன்கள் அடங்கும். நியமிக்கப்பட்ட அனைத்து இந்திய சமூகத் தலைவர்களும் இந்த மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என அவர் கூறினார்.

“உண்மையிலேயே தகுதியும் நம்பகத்தன்மையும் கொண்ட நபர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதிசெய்ய, இந்த ஆண்டு நாங்கள் அறிமுகப்படுத்திய ஒரு புதிய செயல்முறை இதுவாகும்,” என நேற்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில இந்திய சமூகத் தலைவர்களுக்கான பதவியேற்புப் பயிற்சி மற்றும் நியமனக் கடிதம் வழங்கும் விழாவில் அவர் கூறினார்.

இதுவரை, 55 இந்திய சமூகத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 45 பேர் இந்த விழாவில் நியமனக் கடிதங்களைப் பெற்றனர், மீதமுள்ளவர்களின் நியமனம் மேலும் பரிசீலனையில் உள்ளது.

அதே சமயம், ஏற்பாடு செய்யப்பட்ட பதவியேற்புப் பயிற்சி, புதிய மற்றும் ஏற்கனவே உள்ள இந்திய சமூகத் தலைவர்களுக்கு மாவட்டம் மற்றும் நில அலுவலகம், மலேசிய காவல்துறை மற்றும் அமலாக்க ஒருங்கிணைப்புப் பிரிவு (ICU) உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்களை உள்ளடக்கிய விரிவான விளக்கத்தை அளிப்பதாகப் பாப்பாராய்டு கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles