
காளிதாஸ் சுப்ரமணியம்
ஷாஆலம்: மே 8-
பிரசிடெண்ட் கிண்ண கால்பந்து போட்டியில் MISC டச்ட்ரானிக்ஸ் கிளப் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
ஆறு இந்திய இளம் வீரர்களுடன் பிரசிடென்ட் கிண்ண கால்பந்து போட்டியில் MISC டச்ட்ரானிக்ஸ் கிளப் விளையாடி வருகிறது.
இளம் இந்திய கால்பந்து வீரர்களின் திறமைகளை வளர்ப்பதில் தனது வலுவான அர்ப்பணிப்பை MISC டச்ட்ரானிக்ஸ் கிளப் தொடர்ந்து காட்டி வருகிறது.

20 வயதுக்குட்பட்ட ஆறு இந்திய வீரர்களைப் பதிவுசெய்து, தங்களது 20 வயதுக்கு கீழ்ப்பட்ட 2026 எப்ஏஎம் பிரசிடென்ட் கிண்ண லீக் பயணத்தைத் தொடங்கியுள்ளது.
2026 பிரசிடென்ட் கிண்ண போட்டியின் இந்த சீசனில் 11 அணிகள் போட்டியிடுகின்றன.
இதில் நேற்று ஷா ஆலம் மாரா கல்லூரி அரங்கில் நடைபெற்ற கூச்சிங் சிட்டி அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில், டச்ட்ரானிக்ஸ் அணி கடுமையாகப் போராடி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டது.

அணி கேப்டன் பிரவினாஷ், நெருக்கடியான சூழலிலும் தனது நிதானத்தையும் திறனையும் வெளிக்காட்டி 81 ஆவது நிமிடத்தில் ஃப்ரீ-கிக் வாய்ப்பை கோலாக மாற்றினார்.
போட்டியின் இறுதிக்கட்டத்தில் கூச்சிங் சிட்டி அணி சமநிலை செய்யும் வரை, ஆட்டம் முழுவதும் அவரது தலைமைத்துவமும் உறுதியும் தனித்து நின்றன.
18 வயதான பிரவினாஷ், கிளப்பின் மிகச் சிறந்த இளம் வீரர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிளப்பின் 18 வயதுக்குட்பட்டோர் அணியில் விளையாடிய அவர், களத்திலும் களத்திற்கு வெளியேயும் தனது வளர்ச்சியில் சீரான முன்னேற்றத்தைக் காட்டியுள்ளார்.
இளம் வயதிலேயே தனது நிதானம், கடின உழைப்பு, தலைமைத்துவப் பண்புகளுக்காக அறியப்படும் பிரவினாஷின் திறமைகள் மீது பயிற்சி ஊழியர்களுக்கு இருந்த நம்பிக்கையின் பிரதிபலிப்பாக, இந்த சீசனில் அவரிடம் அணி கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

தொடக்கப் போட்டியில் அவரது செயல்பாடு, அவரது தாக்குதல் பங்களிப்பை எடுத்துக்காட்டியது.
மேலும் தேசிய அளவில் போட்டியிடும் ஒரு இளம் அணியை வழிநடத்துவதில் அவரது முதிர்ச்சியையும் பொறுப்பையும் வெளிப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

