
கிள்ளான், மே10-
எரிபொருள் மோசடி அபாயங்களுக்கு சுங்கச் சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும்
கடற்படை, கடல்சார் வழக்கறிஞர் டத்தோ ஜே. ஷமேஷ் இவ்வாறு எச்சரித்தார்.
தவறான அறிவிப்புகள், முறைகேடாகத் திருத்தப்பட்ட ஆவணங்கள் அல்லது ஆவணப்படுத்தப்படாத எரிபொருள் பரிமாற்றங்கள் ஆகியவை, 1967 ஆம் ஆண்டு சுங்கச் சட்டத்தின் கீழ் நிறுவனங்களையும் தனிநபர்களையும் கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாக்கக்கூடும்.
மலேசியாவின் பெட்ரோல் விநியோகச் சங்கிலியில் ஏற்படும் வருவாய் இழப்பு, ஆவண இடைவெளிகள் குறித்து ஒரு தொழில் துறைப் பிரதிநிதி சமீபத்தில் எழுப்பிய கவலைகள் தொடர்பாக அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.
சட்டத்தின் கீழ் உள்ள பல விதிகள் பொருந்தக்கூடும். அவற்றில் பிரிவு 133ஆம் பிரிவும் அடங்கும்.
இப்பிரிவு, பொய்யான அறிவிப்புகள், துல்லியமற்ற அறிக்கைகள், தவறான விவரங்களைச் சமர்ப்பித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
இதற்கு 500,000 ரிங்கிட் வரை அபராதம், ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மேலும், பிரிவு 135 சுங்க வரிகள் அல்லது தடை கட்டுப்பாடுகளை மோசடியாகத் தவிர்ப்பது குறித்துக் கூறுகிறது.
அதே சமயம் பிரிவு 138 போலி ஆவணங்களை உருவாக்குதல் அல்லது பயன்படுத்துதல் தொடர்பான குற்றங்களைக் கையாள்கிறது.
நிறுவனங்களால் குற்றங்கள் செய்யப்படும் நேர்வுகளில், முகவர்கள், ஊழியர்கள் அல்லது நிறுவன அதிகாரிகளுக்கும் பிரிவு 147 பொறுப்பை விரிவுபடுத்துகிறது.
குறிப்பாக பொறுப்பாளிகள் எனக் கண்டறியப்பட்டவர்கள் பல்வேறு அபராதங்களையும் சிறைத்தண்டனையையும் எதிர்கொள்வார்கள்.
குறிப்பிட்ட சூழ்நிலைகளைப் பொறுத்து மானிய எரிபொருள், கலால் வரிகள் அல்லது விற்பனை வரிப் பொறுப்புகள் தொடர்பான முறைகேடுகளும் பிற தொடர்புடைய சட்டங்களின் கீழ் ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம் என்று ஷமேஷ் மேலும் கூறினார்.

