
செனாவாங், மே 24 –
வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு இந்திய சமுதாயத்தின் நலனை மையமாகக் கொண்டு அரசியல் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் மலேசிய மக்கள் சக்தி மற்றும் மஇகா இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக மக்கள் சக்தி தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் தெரிவித்தார்.
செனாவாங்கில் நடைபெற்ற மக்கள் சக்தியின் பச்சபா கருத்தரங்கில் கலந்துகொண்ட அவர், தேர்தலை எதிர்கொள்வதற்கான திட்டங்கள், அரசியல் அணுகுமுறைகள் மற்றும் தயாரிப்புகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் இடம்பெற்றதாக கூறினார்.

அரசியல் ரீதியாக முன்பு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இந்திய சமூகத்தின் எதிர்கால நலனை முன்னிறுத்தி தற்போது ஒருமித்த அணுகுமுறையுடன் செயல்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என அவர் வலியுறுத்தினார்.
மேலும், தேசிய முன்னணியிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வராத நிலையிலும், மக்கள் சக்தி போட்டியிடக்கூடிய தொகுதிகளை ஏற்கனவே அடையாளம் கண்டு தயார்நிலையில் வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

அதேவேளை, முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தலைமையிலான ஆட்சி இந்திய சமுதாயத்திற்கு பல நன்மைகளை வழங்கிய காலமாக இருந்தது என்றும், தற்போது பலரும் அவரது அரசியல் மீள்வரவை எதிர்பார்க்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

