



அகல்யா
செபராங் ஜெயா, ஜூன் 1 –
தமிழ் மொழி ஓர் இனத்தின் உயிர் என்று தனது உரையை தொடக்கிய டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் இதுபோன்ற
”மொழி முழக்கம் என்பது வெறும் தகவல் தொடர்புக்கான கருவி மட்டுமல்ல, அது ஓர் இனத்தின் அடையாளம், பண்பாடு மற்றும் உயிர் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என்று என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் முழங்கினார்.
பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்ற ‘பாவேந்தர் பாரதிதாசன் விழா’வில் சிறப்பு விருந்தினராக வருகை அளித்து, விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றிய போது இலக்கிய வளத்தோடு அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
”தமிழுக்கும் அமுதென்று பேர்! — அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”
என்ற பாரதிதாசனின் அமர வரிகளை நினைவுகூர்ந்த டத்தோ ஸ்ரீ சரவணன், நம் தொன்மையான தமிழ் மொழியைக் காப்பதும், அதன் உன்னதத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதும் நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும் என்றார்.
இந்த உணர்வை உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் ஆழமாக விதைத்தவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் என்று அவர் புகழாரம் சூட்டினார்.
பாவேந்தரின் கவி ஆழமும் புரட்சிச் சிந்தனையும்.
பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்க சங்கத் தலைவர் செ.குணாளன் நெகிழ்ச்சியுரை.
விழாவிற்குத் தலைமை தாங்கிப் பேசிய பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் செ.குணாளன், பாவேந்தர் பாரதிதாசனின் இலக்கியப் பங்களிப்பையும், அவரது கவிதைகளில் பொதிந்துள்ள ஆழமான தத்துவங்களையும் மிக விரிவாக எடுத்துரைத்தார்.
”பாரதிதாசனின் கவிதைகள் வெறும் சொற்களின் சேர்க்கை அல்ல, அவை சமுதாயக் கொடுமைகளுக்கு எதிரான போர்க்குரல். சாதி ஒழிப்பு, பகுத்தறிவு, தமிழ் மொழிப்பற்று, பெண்ணுரிமை என அவர் தொடாத துறைகளே இல்லை. அவரது கவிதை வரிகள் ஒவ்வொன்றும் பாமரனுக்கும் புரியும் எளிய நடையில் அமைந்திருந்தாலும், அவை சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் மிக ஆழமானது, என்று செ.குணாளன் குறிப்பிட்டார்.
மேலும், தமிழ் மொழியின் மீதான பாவேந்தரின் காதலை விளக்கிய அவர், தமிழ் மொழி அழியாமல் வாழ வேண்டுமானால், தமிழ் இலக்கியங்கள் வெறும் புத்தகங்களோடு நின்றுவிடாமல், இளைய தலைமுறையின் வாழ்வியல் நெறியாக மாற வேண்டும் என்றும், அதற்கு இத்தகைய விழாக்கள் அடித்தளமாக அமையும் என்றும் தனது உரையில் வலியுறுத்தினார்.
பெண் கல்வியே சமுதாயத்தின் அடித்தளம்
பெண் விடுதலை குறித்தும், பெண்களுக்கான சம உரிமை குறித்தும் பாவேந்தர் கொண்டிருந்த புரட்சிகரமான சிந்தனைகளை டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் தனது உரையில் ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.
கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம், அந்நிலத்தில்
புல்விளைந்திடலாம்! நல்ல புதல்வர்கள் விளைதல் இல்லை!”
என்ற பாவேந்தரின் வரிகளை மேற்கோள் காட்டிய அவர், ஒரு குடும்பத்தினதும், ஒட்டுமொத்த சமுதாயத்தினதும் முன்னேற்றம் என்பது பெண்களின் கல்வியில் தான் தங்கியுள்ளது என்றார். ஒரு பெண்ணுக்குக் கல்வி புகட்டுவது என்பது, ஒரு தனிநபருக்குக் கற்றுக்கொடுப்பது அல்ல, மாறாக, ஒரு தலைமுறைக்கே அறிவுப் பாதை அமைப்பதற்குச் சமம் ஆகும். பெண் விடுதலையும், பெண்களுக்கான சம உரிமையும் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மிக மிக அவசியம் என்பதைப் பாரதிதாசன் அன்றே ஆழமாகப் பதிவு செய்துள்ளார் என்று பாராட்டினார்.
மாணவர்களுக்குப் பாராட்டு & சிலம்பக் கண்காட்சி
பாரதிதாசனின் புரட்சிக் கருத்துகளையும், தமிழ் உணர்வையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இந்த மகத்தான முயற்சியைப் பாராட்டிய டத்தோ ஸ்ரீ சரவணன், சங்கத்தின் நிர்வாகிகளுக்கும் அதன் தலைவர் செ.குணாளனுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
விருதுகள் வழங்கல்
விழாவின் அங்கமாக நடத்தப்பட்ட கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகளில் கலந்துக்கொண்டு வெற்றிபெற்ற 20 மாணவர்களுக்கு ரொக்கம், நினைவு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. சங்கத்தின் மூத்த தலைவர் ஜெயசந்திரமோகன் என்ற ஜெயலட்சுமிக்கு இலக்கிய செம்மல் என்ற விருது வழங்கப்பட்டது.
வீரக் கலைப் பிரம்மாண்டம்
கவிக்குமார் தலைமையில் பினாங்கு போர்க்கலை சிலம்ப மாணவர்கள் வழங்கிய சிலம்பக் கண்காட்சி விழாவிற்கு வந்திருந்தோரை வெகுவாகக் கவர்ந்தது.
முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்பு
இவ்விழாவில் சங்கத்தின் அறங்காவலர்களான டத்தோஸ்ரீ கா.புலவேந்திரன், டத்தோ மரியதாஸ் கோபால், ஐபிஎப் பினாங்கு மாநிலத் தலைவர் ச.குமரேசன், இந்து சங்க மா.முனியாண்டி,
சேம் ஜுவர்லர்ஸ் நிறுவனத் தலைவர் சண்முகராசு, பினாங்கு மஇகா தலைவர் டத்தோ ஜெ.தினகரன், கெடா மாநில எழுத்தாளர் இயக்கத் தலைவர் க.உதயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், அரசு சாரா இயக்கத் தலைவர்கள், மஇகா தலைவர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.

