
கோலாலம்பூர், ஜூன் 2-
PMX கோப்பைக்கான தேசிய சதுரங்கத் தொடரில் MIED விளையாட்டுப் பிரிவு சதுரங்கக் கழகத்தின் ஆண்கள் அணி மூன்றாம் இடத்தைப் பெற்று சிறப்பான சாதனை படைத்துள்ளது.
AEON மால் மாநாட்டு மண்டபத்தில் நான்கு நாட்களாக நடைபெற்ற இந்தப் போட்டியில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முன்னணி அணிகள் பங்கேற்றன.
ஏழு சுற்றுகளாக நடைபெற்ற போட்டிகளில் 90 நிமிட நேரக் கட்டுப்பாட்டுடன் ஒவ்வொரு நகர்விற்கும் கூடுதலாக 30 வினாடிகள் வழங்கப்பட்டன.
கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் MIED ஆண்கள் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மூன்றாவது இடத்தை வென்றது.

அணியில் நிரிஷ் குமார் சிவகுமார், FM ஜெனிவன் ஜென்கேஸ்வரன், யோகேந்திரராஜ் ராமகிருஷ்ணன் மற்றும் ரித்தேஷ் முரளே ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
மகளிர் அணியில் ஷீவம்பிகை சுகுமாரன், ஷாஷ்மிதா என். கோபி, ஷன்வதனா விஜயன் மற்றும் ஜென்விஷா ஜென்கேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதேவேளை, MIED அணியின் வீரரான FM ஜெனிவன் ஜென்கேஸ்வரன் தனது சிறப்பான ஆட்டத் திறனை வெளிப்படுத்தி போட்டியின் இரண்டாவது சிறந்த வீரராகத் தேர்வானார். அவரது தொடர்ச்சியான வெற்றிகளும் அணியின் சாதனைக்கும் முக்கிய பங்காற்றியதாகக் கூறப்படுகிறது.

இந்த வெற்றிக்கு வீரர்களின் அர்ப்பணிப்பும், பெற்றோர்களின் ஒத்துழைப்பும், பயிற்றுவிப்பாளர்களின் வழிகாட்டுதலும் முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அணியின் மேலாளரான திரு. டி. குமரேசனின் தலைமையும் வீரர்களின் செயல்பாட்டை மேம்படுத்த உதவியதாகப் பாராட்டப்பட்டுள்ளது.
சதுரங்கத்தில் இளம் திறமையாளர்களை உருவாக்கும் முயற்சியில் MIED தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் மேலும் பல இளைஞர்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்த போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கு மஇகாவின் விளையாட்டுப் பிரிவின் தலைவர் என்ட்ரு டேவிட் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.

