

தெலுக் இந்தான்,ஜூன் 09 தெலுக் இந்தான் நகரின் மிக பழமையான ஆலயங்களில் ஒன்றான மணல்மேடு காளியம்மன் (காளியம்மன் ஆலயம்) ஆலயத்தின் 3வது கும்பாபிசேகம் மாநில சுகாதாரம்,மனிதவளம்,தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோ அ.சிவநேசனின் சிறப்பு வருகையோடு மிகவும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நடந்தேறியது.
சுமார் 103 வருட பழமையான இவ்வாலயத்தின் நிலம் JPS-க்கு சொந்தமான நிலமாய் அமைந்துள்ள நிலையில் இவ்வட்டாரத்தின் முக்கியமான ஆலயங்களில் ஒன்றாக திகழும் இவ்வாலயத்திற்கு சம்மதப்பட்ட நிலத்தைப் பெற்று தர டத்தோ சிவநேசன் களமிறங்கியிருப்பதாகவும் அதற்கான விண்ணப்பத்தை உடனடியாக மேற்கொள்ளுமாறும் ஆலய நிர்வாகத்திடம் பரிந்துரை செய்திருப்பதாகவும் வழிபாடுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதேவேளையில்,இந்நிலம் தொடர்பில் நில அலுவலகத்திடமும் கலந்து பேசியிருப்பதாகவும் இந்நிலம் தொடர்பான துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு அதனை மாநில ஆட்சிக்குழு கூட்டத்திற்கு விரைந்து அனுப்பி வைக்குமாறும் மாவட்ட அதிகாரியைக் கேட்டு கொண்டதாகவும் டத்தோ சிவநேசன் விவரித்தார்.
சித்திரப் பௌர்ணமி திருவிழாவின் போது ஆற்றங்கரையிலிருந்து வரும் பக்தர்கள் இங்குதான் காவடி எடுத்தல் போன்றவற்றை மேற்கொள்வார் என்றும் அத்தகைய சிறப்பு மிகு ஆலயத்திற்கு நிலம் பெற்று தருவதில் தனது செயல்பாடு ஆக்கப்பூர்வமானதாக இருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.
இந்நிலத்திற்கான விண்ணப்பம் ஒழுங்குப்படுத்தப்பட்டு மாநில ஆட்சிக்குழு கூட்டத்தின் கவனத்திற்கு வரும்போது ஆலய நிர்வாகத்திற்கு நிச்சயம் நல்ல செய்தி கிட்டும் என்றும் நம்பிக்கை தெரிவித்த சிவநேசன் பேரா மாநிலத்தில் எந்தவொரு ஆலயமும் உடைப்படுவதற்கு தாம் அனுமதிக்கப்போவதில்லை என்றும் இதுவரை இம்மாநிலத்தில் ஆலய விவகாரங்களில் நிறைவான முன்னெடுப்புகளைத் தனது தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வந்திருப்பதாகவும் கூறினார்.
அதேவேளையில், சில ஆலய நிர்வாகங்கள் நிறைவான ஒத்துழைப்பு வழங்க மறுப்பதையும் சுட்டிக்காண்பித்த சிவநேசன் ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் நிர்வாகங்களால் சம்மதப்பட்ட ஆலயங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு தாமும் மாநில அரசும் பொறுப்பேற்க இயலாது என்றும் நினைவுறுத்தினார்.
அதும்ட்டுமின்றி,ஒத்துழைப்பு வழங்கிய பல ஆலயங்களுக்கு நிலம் வழங்கப்பட்டு முறையான இடமாற்றமும் நிகழ்ந்துள்ளது. சில ஆலயங்களின் இடமாற்றத்திற்கும் அல்லது சாமி சிலைகள் இடமாற்றங்களுக்கான செலவினத்தை மாநில அரசே வழங்கியும் உள்ளது என்பதையும் சமய ஆர்வலருமான டத்தோ சிவநேசன் நினைவுக்கூர்ந்தார்.
மேலும்,ஆலயங்களுக்கு மாநில அரசு ஒப்புதல் கொடுப்பதில்லை என்னும் கூற்றும் உண்மை அல்ல.உத்தான் மெலிந்தாங்கில் மேல்மருத்துவர் ஆதிபராசக்தி ஆலயத்திற்கு மாநில அரசு ஒப்புதல் வழங்கி பூமிபூஜையும் நிறைவாய் நடந்தேறியுள்ளது என்றார்.
பேரா மாநில அரசு எந்தவொரு வழிபாடு தலங்களுக்கும் இதுவரை தடை விதித்ததில்லை.முறையான விண்ணப்பம்,முறையான நிலம்,எந்தவொரு சிக்கலும் இல்லாத சூழல் இருப்பின் அரசாங்கம் ஆக்கப்பூர்வமாக கவனத்தில் கொண்டு அதனை முறைப்படுத்தி கொடுப்பதாகவும் டத்தோ சிவநேசன் தெரிவித்தார்.
எனவே, பேரா மாநிலத்தில் இந்து ஆலயங்களும் சமய செயல்பாடுகள் நிறைவாகவும் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகவும் திகழ்வதாக குறிப்பிட்டார்.
முன்னதாக இந்த ஆலயத்திற்கு மூன்று கட்டங்களாக ஆலயத் திருப்பணி தொடங்கி கும்பாபிசேகம் வரையிலான செலவினங்களுக்காக மாநில அரசு சார்பாக இதுவரை வெ.1 லட்சம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் டத்தோ சிவநேசன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இதற்கிடையில், இவ்வாலயத்தின் திருப்பணிக்கும் கும்பாபிசேகத்திற்கும் பெரும் மானியம் வழங்கிய டத்தோ சிவநேசனுக்கும் மாநில அரசுக்கும் ஆலயத்தலைவர் திரு.பிரகாஷ் நன்றி தெரிவித்ததோடு டத்தோ சிவநேசனின் ஆலோசனையின் அடிப்படையில் நிலம் சார்ந்த முன்னெடுப்புகள் விரைந்து ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
அதுமட்டுமின்றி, இம்மாநில ஆலயங்களின் காவலராக நிறைவான சேவை செய்யும் சேவை செம்மல் டத்தோ சிவநேசனின் ஆலோசனையை பின்பற்றி அவர் முன்னெடுக்கும் ஆக்கப்பூர்வ பணிகளுக்கு இம்மாநில ஆலய நிர்வாகங்களும் சமய நிர்வாகங்களும் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்கிட வேண்டும் என்றும் ஆலயத் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

