

ஈப்போ ஜூலை 1-
பேராக் மாநில அரசின் ஏற்பாட்டில் வரும் ஜூலை மாதம் 26,26 ஆம் தேதிகளில் மிகப்பெரிய அளவில் தேசிய திருமுருகன் மாநாடு ஈப்போ கல்லு மலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய மண்டபத்தில் நடைபெறுகிறது.
மலேசிய இந்து சமூகத்தின் ஆன்மிக, சமய மற்றும் பண்பாட்டு வரலாற்றில் புதிய மைல்கல்லாக அமையவுள்ள தேசிய திருமுருகன் மாநாட்டிற்கான அறிமுக விழா இன்று ஈப்போ எக்ஸெல்சியர் ஹோட்டலில் மாநில அரசின் ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்றது.
பேரா மாநில மனிதவளம், சுகாதாரம், இந்தியர் சமூக நலன், தேசிய ஒருமைப்பாட்டுத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் ஆச்சலிங்கம் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்து சமய அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆலய நிர்வாகிகள், தமிழ் அமைப்புகளின் தலைவர்கள், கல்வியாளர்கள், சமூகப் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள்
கலந்து கொண்டனர்.
தமிழ் கடவுள் முருகப் பெருமானின் வழிபாடு என்பது தமிழர்களின் சமய அடையாளம் மட்டுமல்ல.
அது மொழி, பண்பாடு, ஒழுக்கம், ஒற்றுமை, வாழ்வியல் நெறிகளை தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லும் மகத்தான பாரம்பரியமாகும் என்று அவர் சொன்னார்.
இதன் அடிப்படையில் தான் தேசிய திருமுருகன் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்மாநாடு வரும் ஜூலை 25, 26ஆம் தேதிகளில் ஈப்போ கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெறவுள்ளது.
இம்மாநாடு ஒரு சாதாரண சமய நிகழ்ச்சி அல்ல.
இது முருக வழிபாட்டின் வரலாறு, தமிழ் இலக்கியங்களில் முருகப் பெருமானின் மகத்துவம், ஆலய மரபுகள், சமுதாய ஒற்றுமை, இளைஞர்களின் ஆன்மிக விழிப்புணர்வை ஒருங்கிணைக்கும் தேசிய அறிவுசார் மாநாடாக அமையும் என்று டத்தோ சிவநேசன் சுட்டிக் காட்டினார்.

