
ஈப்போ, ஜூலை 1-
பேராக் மாநில அரசின் ஏற்பாட்டில் தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு தேசிய அளவில் மாபெரும் மாநாடு ஜூலை 25,26 ஆம் தேதிகளில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
முதல் முறையாக பேராக் மாநில அரசின் ஆதரவிலும், ஏற்பாட்டிலும் திருமுருகன் மாநாடு நடைபெறவுள்ளது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று பேராக் இத்திய சமூக நலத்துறை, சுகாதாரம், மனிதவளம், ஒற்றுமைத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் தெரிவித்தார்.
இம்மாநாடு ஈப்போ கல்லு மலை ஸ்ரீ சிவ சுப்பிரமணிய ஆலய மண்டபத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு வரும் ஜூலை 25 ஆம் தேதி தொடங்கி ஜூலை 26 ஆம் தேதி முற்றுப்பெறும் என்று டத்தோ அ.சிவநேசன் கூறினார்.
இம்மாநாடு பல இயக்கங்களுடன் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக மலேசிய இந்து சங்கம் பேராக் மாநில பேரவை, மலேசிய இந்து தர்ம மாமன்றம் பேராக் மாநிலம், பேராக் மாநில இந்து அர்ச்சகர் சங்கம், ஸ்ரீ சிவ சுப்பிரமணியர் ஆலயம் கம்போங் கபாயாங், ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா, பேராக் மாநில தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் கழகம், பேராக் அருணகிரிநாதர் மன்றம் மற்றும் இதர இயக்கங்களின் ஆதரவோடு இம்மாநாடு நடைபெறவுள்ளது.
மாநாட்டில் சிறப்பு மலர் ஒன்று வெளியிடப்படும்.
இந்த மாநாட்டில் 2 ஆயிரம் இந்து சமயத்தினர் கலந்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

