
கோலாலம்பூர் ஜூலை 20-
2015ஆம் ஆண்டு முதல் சுமார் 11 ஆண்டுகளாகத் தாமதமடைந்திருந்த சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டு, 2027ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் நிறைவடையும் என கல்வி அமைச்சர் YB ஃபட்லினா சிடேக் அறிவித்திருப்பதை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.
இந்தத் திட்டம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் நீண்டகாலமாக தொடர்ந்து குரல் கொடுத்து, சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் பல்வேறு தரப்புகளுடன் முயற்சிகளை மேற்கொண்டு வந்தோம்.
இன்று கிடைத்துள்ள இந்த முன்னேற்றம், அந்தத் தொடர்ச்சியான போராட்டத்திற்கும் முயற்சிகளுக்கும் கிடைத்த வெற்றியாகும்.
இத்திட்டத்திற்காக RM12.67 மில்லியன் உச்சவரம்பு நிதியை அங்கீகரித்த பிரதமர் YAB டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கும், நீண்டகாலமாக நிலுவையில் இருந்த இந்தப் பிரச்சினைக்கு உறுதியான தீர்வு காண நடவடிக்கை எடுத்த கல்வி அமைச்சர் YB ஃபட்லினா சிடேக் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது வெறும் புதிய பள்ளிக் கட்டடத் திட்டம் மட்டுமல்ல. இது பல ஆண்டுகளாகக் காத்திருந்த மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளூர் இந்திய சமூகத்திற்குக் கிடைத்த நீதியும் நம்பிக்கையும் ஆகும்.
கடந்த காலத்தில் தீர்க்கப்படாமல் விடப்பட்ட பிரச்சினைகளை மீண்டும் ஆய்வு செய்து, நிதி, சட்ட மற்றும் நிர்வாகத் தடைகளைத் தீர்த்து, மக்களுக்கு உண்மையான முடிவுகளை வழங்குவதே மடானி அரசாங்கத்தின் பணிமுறை.
சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளித் திட்டம், மடானி அரசாங்கம் எவ்வாறு செயல்பட்டு முடிவுகளை வழங்குகிறது என்பதற்கான ஒரு சிறந்த வெற்றிக் கதையாகும்.
அதே நேரத்தில், உட்கட்டமைப்பு, நிலம், மாணவர் எண்ணிக்கை, பள்ளி இடமாற்றம் மற்றும் புதிய கட்டடத் தேவைகள் தொடர்பாக சவால்களை எதிர்கொள்ளும் மேலும் பல தமிழ்ப்பள்ளிகளின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றோம்.
தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தரமான கல்வி வாய்ப்புகள் தொடர்பான எங்கள் போராட்டம் தொடரும். அறிவிப்புகளோடு மட்டும் நின்றுவிடாமல், ஒவ்வொரு திட்டமும் முழுமையாக நிறைவேறும் வரை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம்.
இப்படிக்கு
கோபிந்த் சிங் டியோ,
இலக்கவியல் அமைச்சர்,
டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினர்

