
நெகிரி செம்பிலான் – ஜூலை 22,
பாஸ் (PAS) மற்றும் பாரிசான் நேஷ்னல் (BN) இடையிலான முந்தைய அரசியல் ஒத்துழைப்பின் விளைவுகளை நினைவில் வைத்து, புதிய கூட்டணிகளை மக்கள் ஆராய்ந்து மதிப்பீடு செய்ய வேண்டும் என்று சிலாங்கூர் கெஅடிலான் (PKR) மாநிலத் தேர்தல் இயக்குநர் டாக்டர் சத்ய பிரகாஷ் நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.
2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு பாஸ் மற்றும் பாரிசான் நேஷனல், பெரிக்காத்தான் நேஷ்னல் அரசில் இணைந்து செயல்பட்ட காலகட்டத்தின் இறுதியில் அரசியல் நிலையற்ற தன்மை, முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைவு உள்ளிட்ட பல்வேறு சவால்கள் உருவானதை மக்கள் இன்னும் மறக்கவில்லை என அவர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.
அரசியல் கூட்டணி என்பது தேர்தல் வெற்றிக்காக மட்டுமல்ல மாறாக நாட்டின் எதிர்காலம், நிர்வாகத்தின் நிலைத்தன்மை மற்றும் மக்களின் நம்பிக்கையுடன் தொடர்புடையது.
இந்த ஒத்துழைப்பு உண்மையில் மக்களின் நலனுக்காகவா அல்லது அரசியல் அதிகாரத்திற்காகவா என்பதையே மக்கள் சிந்திக்க வேண்டும்.
முன்பு வெவ்வேறு அரசியல் கொள்கைகளைக் கொண்டிருந்த கட்சிகள் இன்று ஒன்றிணைந்திருப்பது குறித்து மக்கள் கேள்வி எழுப்புவது இயல்பானது.
ஒரு காலத்தில் கடுமையான கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்த இரு கட்சிகளும் இன்று அதிகாரத்திற்காக இணைந்திருந்தால், அவர்கள் முன்னிறுத்திய கொள்கைகள் எங்கே? என உலு சிலாங்கூர் கெஅடிலான் தொகுதி தலைவருமான அவர் கேள்வி எழுப்பினார்.
அந்த மாற்றத்தின் அடிப்படை என்ன?
மக்களின் நலனே முன்னுரிமை என்பதற்கான உத்தரவாதம் என்ன? என்பதற்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும்.
மேலும், முதிர்ச்சியான அரசியல் என்பது கூட்டணி அமைப்பதைத் தடுக்காது என்றாலும், அது தெளிவான கொள்கை, மக்களிடம் நேர்மை மற்றும் நல்லாட்சிக்கான உறுதிப்பாட்டின் அடிப்படையில் அமைய வேண்டும்.
கொள்கைகள் சாதகமாக இருக்கும் போது மட்டும் பயன்படுத்திக் கொண்டு, பின்னர் அதிகாரத்திற்காக அவற்றைக் கைவிடக் கூடாது.
அரசியலில் மக்கள் வார்த்தைகளை மறந்துவிடலாம், ஆனால் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளையும் அவர்களின் வரலாற்றுப் பதிவுகளையும் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என டாக்டர் சத்ய பிரகாஷ் கூறினார்.

