
ஷா ஆலாம், ஆகஸ்ட் 7 — கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி (SJKT Ladang Kerling) ஆசிரியையின் மறைவைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினருக்குக் கல்வி அமைச்சு அனைத்து வகையான உதவிகளையும் வழங்கி வருவதாகக் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.
மறைந்த ஆசிரியரின் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்த அமைச்சர் ஃபட்லினா, துயரத்தில் இருக்கும் அக்குடும்பத்தின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறும், ஆசிரியரின் மரணம் குறித்துச் சமூக ஊடகங்களில் தேவையற்ற ஊகங்களை வெளியிட வேண்டாம் என்றும் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.
“மறைந்த ஆசிரியரின் குடும்பத்தினரும், பாதிக்கப்பட்ட பள்ளி ஊழியர்களும் மிகச்சிறந்த ஆதரவைப் பெறுவதை உறுதி செய்வதற்காகக் கல்வி அமைச்சு தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது” என்று அவர் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது குடும்பத்தினருக்குத் தமது ஆழ்ந்த இரங்கலையும் ஆதரவையும் தெரிவித்த அமைச்சர், போலீஸ் விசாரணை இன்னும் தொடர்ந்து வருவதாகத் தெரிவித்தார்.
சமூக வலைதளங்களில் நிலவும் அனுமானங்களின் அடிப்படையில் அல்லாமல், உண்மையான விசாரணையின் அடிப்படையிலேயே அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

