வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணி நியமன நடைமுறைகள் இனி முழுமையாக டிஜிட்டல் மயமாகிறது! :மனிதவள அமைச்சு அதிரடி நடவடிக்கை

புத்ராஜெயா, ஆக.22-
மலேசியாவில் வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்துவதற்கான அனைத்து விண்ணப்ப முறைகளும் இன்று முதல் ‘வெளிநாட்டுத் தொழிலாளர் மைய மேலாண்மை முறைமை’ (FWCMS) வாயிலாகவே முழுமையாக இணையவழியில் செயல்படுத்தப்படும் என மனிதவள அமைச்சு (கெசுமா) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதன் மூலம், பயன்பாட்டிலிருந்த கைமுறை விண்ணப்ப முறையும், அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கும் வழக்கமும் உடனடியாக முடிவுக்கு வருகின்றன.

முதலாளிகள் அரசுத் துறைகளுக்கு அடிக்கடி நேரில் அலைவதைத் தவிர்ப்பது, தேவையற்ற காத்திருப்பு நேரத்தைக் கணிசமாகக் குறைப்பது மற்றும் விண்ணப்பச் செயல்முறைகள் அனைத்தையும் நல்நிர்வாக நெறிமுறைகளுடன் வெளிப்படையான கட்டமைப்புக்குள் கொண்டுவருவதே இப்புதிய சீர்திருத்தத்தின் முதன்மை நோக்கமாகும்.

இருப்பினும், இச்செயல்முறை டிஜிட்டல் மயமாக்கப்படுவதால் பணி நியமனத்திற்கான அடிப்படை விதிகளிலோ, சட்டத் தேவைகளிலோ அல்லது தகுதிகளிலோ எவ்விதத் தளர்வுகளும் செய்யப்படவில்லை என்று அமைச்சு திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.

சமர்ப்பிக்கப்படும் அனைத்து விண்ணப்பங்களும் வழக்கம்போல் நாட்டின் சட்ட திட்டங்கள், கொள்கை வழிகாட்டுதல்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை முகமைகளின் (AKS) கடுமையான பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே ஒப்புதல் அளிக்கப்படும்.

1955-ஆம் ஆண்டு வேலைவாய்ப்புச் சட்டத்தின் பிரிவு 60K-ன் கீழ் முதலாளிகள் கோரும் முதற்கட்ட அனுமதித் தொடங்கி, ‘நிபந்தனைக்குட்பட்ட ஒப்புதல் கடிதம்’ (SKB) பெறும் வரை அனைத்து நிலைகளும் FWCMS இணையதளத்திலேயே கையாளப்படும்.

தேவையான ஆவணங்கள் முழுமையாகவும் தகுதிகளுக்கு உட்பட்டும் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், 14 நாட்களுக்குள் இந்த ஒப்புதல் கடிதத்தை முதலாளிகள் பெற முடியும்.

முதலாளிகள் இச்சேவையைப் பெற www.fwcms.com.my எனும் இணையமுகவரியைப் பயன்படுத்தலாம்.

இதனிடையே, உணவகத் துறைக்கென 15,000 தொழிலாளர் ஒதுக்கீடு வழங்கப்படும் எனப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த ஜூலை 24-ஆம் தேதி அறிவித்ததைத் தொடர்ந்து, அதற்கான நடைமுறைகள் கட்டம் கட்டமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன் முதற்கட்டமாக, ஏற்கனவே நேர்காணல் நிறைவடைந்த 1,033 முதலாளிகளுக்குச் சொந்தமான 5,000 தொழிலாளர்களின் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே நேர்காணல் முடிந்த முதலாளிகளும், புதிய கோரிக்கைகளைச் சமர்ப்பிக்க விரும்புவோரும் FWCMS தளத்திலேயே தங்களது விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அதேவேளையில், கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் (கே.எல்.ஐ.ஏ) வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வருகையின்போது ஏற்படும் நெரிசலைக் கட்டுப்படுத்த ‘வெளிநாட்டுத் தொழிலாளர் இடைப்பயண மையம்’ (Transit Centre) ஒன்றை அமைப்பது குறித்து அரசு தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும், விரைவில் இதற்கான முன்னோடித் திட்டம் தொடங்கப்படும் என்றும் மனிதவள அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles