
நிபோங் திபால், செப் 8: நாட்டிலுள்ள எந்தவொரு தமிழ்ப்பள்ளியும் மூடப்படாது என்று கல்வி அமைச்சு உறுதியளித்துள்ளது.
மாறாக, அப்பள்ளிகளின் மேம்பாடு,பராமரிப்பு மற்றும் ஆசிரியர், மாணவர் திறன் மேம்பாடு ஆகிய அம்சங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தப்படுமென கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஃபட்லினா சிடெக் தெரிவித்தார்.
சுங்கை பாக்காப் தமிழிப் பள்ளியின் அடிக்கல் நாட்டு விழாவில் கல்வியமைச்சர் ஃபட்லினா சீடேக்
தமிழ்ப்பள்ளிகள் மூடப்படலாம் என்ற தவறான கருத்து இன்னும் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருவதால், இந்த உறுதிமொழி மிகவும் அவசியமானது என்று அவர் குறிப்பிட்டார்.
சுங்கை பாகாப் தமிழ்ப்பள்ளியின் கட்டுமானத் திட்டத்திற்கான ‘ஒப்புதல் கடிதம்’ வழங்கும் விழாவிலும், அடிக்கல் நாட்டு விழாவிலும் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
12.6 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள இந்தத் திட்டம் ‘யாயாசான் டிடிக் நெகாரா’ (YDN) அமைப்பினால் 56 வாரங்களுக்குள் செயல்படுத்தப்படும் என்றும், இதன் அமலாக்கத்தை பினாங்கு மாநில கல்வி வாரியம் (JPN) கண்காணிக்கும் என்றும் கல்வியமைச்சர் கூறினார்.
சுங்கை பாகாப் தமிழ்ப்பள்ளியின் கட்டுமானத்தை சாத்தியமாக்குவதில் பங்களித்த சமூகம், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் உள்ளூர் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

