



பத்துமலை, செப் 16-
தமிழ்க் கடவுள் முருகப் பெருமான் குடிக்கொண்டிருக்கும் பத்துமலை திருத்தலத்தில் அமைந்திருக்கும் பத்துமலை தமிழ்ப் பள்ளி மண்டபத்தில் இன்று நடைபெற்ற மலேசியத் தமிழ் சமயப் பேரவையின் தமிழ்ச்சமய விழா 2026 முத்திரை பதித்தது.
மஇகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் இந்த விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து சிறப்புரையாற்றி ஆதரவு வழங்கினர்.
மலேசிய தமிழ்ச்சமயப் பேரவை ஏற்பாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மலேசிய நாளான செப்டம்பர் 16 ஆம் தேதி பத்துமலை திருத்தலத்தில் மாநாடுகள் அமர்வுகள் என பல முன்னெடுப்புகளுக்கு பிறகு தற்போது தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் “தமிழ்ச்சமய விழாவாக” பேரெழுச்சியுடன் இனிதே நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இன்று நடைபெற்ற விழா அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது.
“இளைய தலைமுறையினருக்காகவே” என்ற உன்னத நோக்கில் “தலைமுறைதோறும் தமிழ்ச்சமயம்” எனும் கருப்பொருளில் இவ்விழா அமைந்திருந்தது மிகவும் பாராட்டுக்குரியது.
உலகப் பொதுமறை தந்த தமிழர் மறையாசான் திருவள்ளுவர் திருவுருவத்திற்கு மலர் வணக்கம் செலுத்தி, கும்ப மரியாதையோடு விழா தமிழர் பாரம்பரியத்தோடு தொடங்கியது.
இன்று பொது விடுமுறை என்றாலும் தமிழ் மீதும் தமிழ்ச்சமயம் மீதும் பற்றுள்ள தமிழர்கள் பெரும் அளவில் கலந்து சிறப்பித்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் மலேசியத் தமிழ்ச்சமயப் பேரவை மேற்கொண்டு வரும் இந்த தமிழ்ச்சமயப் பணி சேவை தமிழுக்கு மகுடம் சூட்டும் விழாவாக விளங்குகிறது.
அந்த வகையில் மலேசியத் தமிழ்ச்சமயப் பேரவையின் செயல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வீராசாமி தலைமையிலான ஏற்பாட்டுக் குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
இந்நாட்டில் தமிழும் தமிழ்ச்சமயமும் வாழும் என்பதற்கு இந்த விழா ஒரு அடித்தளமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

