

இந்திய மாணவர்கள் கல்வி கற்பதற்கு உகந்த சூழலை உருவாக்குவதே கெப்சோ லைஃப் எனப்படும் கோலாலம்பூர், சிலாங்கூர் சமூகநல மேம்பாட்டு இயக்கத்தின் முதன்மை நோக்கமாகும்.
இதையடுத்து, கெர்லிங் தோட்ட தேசிய வகை தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு புத்தகப் பைகள், பள்ளி உபகரணங்கள், சத்துள்ள பால் மாவு ஆகியவை வழங்கப்பட்டதாக அதன் தலைவர், டாக்டர் ஜோன் ராஜ் தெரிவித்தார்.
கோவிட்-19 கால கட்டத்தில் உலகமே முடங்கிய நிலையில் பலரின் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளானதோடு வருமானத்தை இழக்கவும் நேரிட்டது.
இந்நிலையில் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் கெப்சோ லைஃப் தனது பங்கை ஆற்றி வருகிறது.
இதுபோன்ற சேவைகள் சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கைச் சுமையை ஓரளவு குறைப்பதற்கும் சம்பந்தப்பட்ட மாணவர்கள் உகந்த சூழலில் கல்வி கற்பதற்கும் வகை செய்யும் என்றார் அவர்.
கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக கெப்சோ லைஃப் திட்டத்தின் வழி 1,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. இதற்குத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்களும் சக ஆசிரியர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் தன்னிகரில்லா சேவையை வழங்கி வருவது பாராட்டுக்கு உரியது என டாக்டர் ஜோன் ராஜ் புகழாரம் சூட்டினார்.

